குரங்குகள் ஏற்றுமதி செய்வது குறித்து சீனாவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படவில்லை

இலங்கை அரசாங்கம், சீனாவிற்கு குரங்குகளை ஏற்றுமதி செய்வது தொடர்பாக அவ் அரசாங்கத்துடன் எவ்வித உடன்படிக்கையையும் ஏற்படுத்திக்கொள்ளவில்லை என்று அமைச்சரவைப் பேச்சாளர், வெகுஜன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (18) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கொண்டவாறு குறிப்பிட்டார்.

சீனாவிற்கு 1000 குரங்குகளை ஏற்றுமதி செய்யவது குறித்து, தற்போது, சமூக ஊடகங்களில் பரவலாக பேசப்படும் பிரச்சாரம் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

சீனாவில் உள்ள தனியார் நிறுவனமொன்றினால் ஆயிரம் மிருகக்காட்சிசாலைகளுக்கு தேவையான குரங்குகளைப் பெற்றுக்கொள்வது தொடர்பில் விவசாய அமைச்சரிடம் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு மற்றும் சுற்றாடல் அமைச்சுக்களுடன் கலந்தாலோசித்து இவ்வாறான வர்த்தக ஒப்பந்தத்தை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராய்ந்து வருவதாக விவசாய அமைச்சர் நேற்று அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் குறிப்பிட்டார்.

அத்துடன், சீன அரசிடம் நம்மை விட கடுமையான சட்ட அமைப்பு உள்ளது. உயிருள்ள விலங்குகளை இறைச்சிக்காக ஏற்றுமதி செய்வதற்கு எந்த அரசும் அனுமதி வழங்குவதில்லை. அரசாங்கங்களுக்கிடையில் அவ்வாறான கலந்துரையாடல் எதுவும் இடம்பெறவில்லை. தனியார் நிறுவனம் ஒன்றினால் இவ்வாறான பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதுடன், அது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.