மக்களவையில் செங்கோலை நிறுவியது பொருத்தமானது

சீனா தன்னை ‘‘சீன மக்கள் குடியரசு’’ என அழைத்துக்கொள்கிறது. குறிப்பிட்ட வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெற்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நடைபெற்றால் மட்டுமே ஒரு நாடு ஜனநாயக நாடாக மிளிர முடியும். எனவே சீனா ஜனநாயக நாடாக முடியாது.

பரம்பரையாக வரும் ராஜா அல்லது ராணியை தலைமையாக கொண்டிருக்கும் ஒரு நாடு குடியரசாக முடியாது. இங்கிலாந்து ஜனநாயக நாடாக திகழ்ந்த போதிலும், மன்னர் ஆட்சி நடைபெறுவதால் அந்த நாடு குடியரசாக முடியாது.

ஆனால் இந்தியா ஒரே சமயத்தில் குடியரசாகவும் ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது. இந்தியா குடியரசு என்பதை பறை சாற்றும் விதமாக முதல் குடிமகனாக குடியரசுத் தலைவர் இருக்கிறார்.

மத்திய, மாநில அரசுகளின் ஆட்சி அதிகாரம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் கைகளிலே கொடுக்கப்படுகிறது. எனவே இந்தியா ஜனநாயக நாடாகவும் திகழ்கிறது. நாடாளுமன்றம் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளின் அவையாக இருப்பதால் ஜனநாயகத்தின் கோயிலாகத் திகழ்கிறது. மக்களால், மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்டவராக, ஜனநாயகத்தின் தலைவராக பிரதமர் திகழ்கிறார். எனவே, ஜனநாயகத்தின் கோயிலை பிரதமர் திறந்து வைத்தது பொருத்தமானது.

திருவாவாடுதுறை இளைய ஆதீனம், ஜவஹர்லால் நேருவுக்கு கொடுத்த புகைப்படம் மட்டும்இல்லாவிட்டால், பிரயாக்ராஜில் நேரு அருங்காட்சியத்தில் ‘பண்டிட் ஜவஹர்லால் நேருவுக்கு பரிசாகவழங்கப்பட்ட தங்க ஊன்றுகோல்’ ஊன்றுகோலாகவே வரலாற்றுப் புத்தகங்களில் புதைந்து போயிருக்கும். கடந்த 1947-ல் இருந்து தொடர்ந்து 16 ஆண்டுகள் பிரதமராகவே தொடர்ந்த நேரு எப்போது ஊன்றுகோலை பயன்படுத்தும் அளவுக்கு தளர்ந்து போனார்? ஊன்றுகோலைப் பயன்படுத்தும் நிலையில் இருப்பவர்களுக்கு யாராவது ஐந்து கிலோ எடையுள்ள ஊன்றுகோலை பரிசளிப்பார்களா?

செங்கோலின் சிறப்பு குறித்து தமிழ் இலக்கியங்கள் மிக விரிவாக குறிப்பிட்டிருக்கின்றன. உயிர் போகும் அளவுக்கு பாதிப்பு ஏற்படுவதாக இருந்தாலும், அரசன் நடுநிலையோடு நீதி வழங்க வேண்டும். நவீன இந்தியாவில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புடன் நீதி நிலைநாட்டப்படுகிறதோ அதுபோலமுடியாட்சியில் மன்னரது தீர்ப்பே இறுதியானது. ஆதாரங்களை சரிபார்க்காமல் அல்லது அவசரகோலத்தில் அரசன் தவறான நீதி வழங்கினால் அவன்கையில் இருக்கும் செங்கோல் வளைந்து விட்டதாகவே கருதப்படும். நீதி நெறி தவறாது ஆட்சி வழங்கும் வரையில்தான் அவன்அரசன். அதில் தவறிவிட்டால் அவனுக்கு விமோச்சனம் இல்லை. இறையருள் பூர்ணமாக இருந்தால் மட்டுமே அரசனால் சிக்கலான வழக்குகளை தீர்த்துவைக்க முடியும் என்றும் கருதப்பட்டது.

அரசியின் சிலம்பை திருடினான் என்ற குற்றச்சாட்டில் கோவலனுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட போது, அவனது மனைவி கண்ணகி கொதித்தெழுந்தாள். அரசியின் சிலம்பு முத்துப்பரல்களால் ஆனது. தனது சிலம்பு மாணிக்கப் பரல்களால் ஆனது என்பதை ஆதாரத்துடன் கண்ணகி எடுத்துரைத்தது சிலப்பதிகார வரலாறு. நீதி தவறியதால் பாண்டிய அரசன் உடனே மரணமடைந்ததும் செங்கோலுடன் தொடர்புடைய வரலாறு.

“வரப்புயர நீர் உயரும், நீர் உயர நெல் உயரும், நெல் உயரக் குடி உயரும், குடி உயரக் கோல் உயரும், கோல் உயரக் கோன் உயர்வான்”. இது அவ்வையார் எழுதிய செய்யுள். வளமையோடு ஒரு நாடு இருந்தால் செங்கோல் உயர்ந்து நிற்கும். அந்நாட்டின் மன்னனும் உயர்ந்து நிற்பான் என்கிறது. ஜனநாயக நாட்டில், எல்லோரும் இந்நாட்டு மன்னர் என்பதால், மக்களது உயர்வைக் குறிப்பதாகவே கொள்ள வேண்டும்.

வலிமை, வளமை, நீதி, நல்நிர்வாகம், மக்களின் பாதுகாப்பு, நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை என ஒரு தேசத்தின் அதனை அம்சங்களையும் குறிப்பது செங்கோல். அந்த வகையில் மக்களவை சபாநாயகர் இருக்கைக்கு அருகில் செங்கோலை நிறுவியது பொருத்தமானது.

– திருவண்ணாதபுரம் இராமகிருஷ்ணன்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.