விபத்தில் சிக்கிய 178 பயணிகளின் கதி என்ன? – ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவசர ஆலோசனை

அமராவதி: ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள் 178 பேரின் நிலைமை குறித்து அமராவதில் ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையில் அதிகாரிகள், அமைச்சர்களின் அவசர ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. விபத்து குறித்து ஆந்திராவின் முக்கிய ரயில் நிலையங்களில் அவசர எண்கள் வழங்கப்பட்டு உதவி மையங்கள் செயல்பட்டு வருகின்றன.

ஒடிசா மாநிலம், பாலசோர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு சரக்கு ரயில் மீது ஷாலிமர் – சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் யஷ்வந்த்பூர் – ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலும் மோதி கோர விபத்துக்குள்ளானதில் இதுவரை 288 பேர் உயிரிழந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காயமடைந்து புவனேஸ்வர், கட்டாக் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும்ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணித்த ஆந்திராவை சேர்ந்த178 பயணிகள் என்னவானார்கள்? என்பது குறித்து நேற்று முதல்வர் ஜெகன் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

ரேணிகுண்டா, திருப்பதி, நெல்லூர், ஓங்கோல், விஜயவாடா, குண்டூர், விசாகப்பட்டினம், ஸ்ரீகாகுளம், விஜயநகரம் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் உள்ள ரயில் நிலையங்களில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள உதவி மையங்கள் மூலம் வந்த தகவல்கள் குறித்து விசாரித்தார். அதன்படி, ஹவுரா-எக்ஸ்பிரஸ் ரயிலில் விஜயவாடா ரயில் நிலையத்தில் இறங்க வேண்டியவர்கள் 52 பேர், கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயிலில் 126 பேர் உள்ளனர்.

இவர்களில் விபத்துக்குள்ளானவர்கள் யார்? யார்? என்பது குறித்து முதல்வர் ஜெகன் விசாரணை நடத்தினார். இறந்தவர்களின் சடலங்களை விமானம் மூலம் கொண்டு வந்து, அவரவர் சொந்த ஊர்களுக்கு அரசு செலவில் அனுப்பி வைக்க வேண்டுமென ஜெகன் உத்தரவிட்டார்.

ஒடிசா ரயில் விபத்தில் சிக்கிய ஆந்திர பயணிகள் 178 பேரும் முன்பதிவு செய்த பயணிகள் ஆவர். ஆனால், முன்பதிவு செய்யாமல் பொதுப்பெட்டியில் எத்தனை பேர் வந்தனர் என்பது குறித்தும் முதல்வர் ஜெகன் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். அதன்படி, ஆந்திர மாநில அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் ரயில்வே துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர்.

மேலும், செகந்திராபாத் ரயில் நிலைய உதவி மைய எண் 040-27788516, விஜயவாடா எண்: 0866-2576924, ராஜமுந்திரி 0883-2420541, ரேணிகுண்டா 99491 98414, திருப்பதி 78159 55071, விஜயநகரம் 08922-221202, ஒடிசா அரசு ஏற்பாடு செய்துள்ள இலவச உதவி எண் 06782-26228 ஆகியவை ஆந்திர அரசாலும், ரயில்வே துறையாலும் வெளியிடப்பட்டுள்ளன.

4 தண்டவாளங்கள், 3 ரயில்கள், சில நிமிடங்கள்

ஒடிசாவின் பாஹாநாகா பஜார் பகுதியில் 4 தண்டவாளங்கள் உள்ளன. இதில் முதல் தண்டவாளத்தில் சரக்கு ரயில் நின்று கொண்டிருந்தது. கொல்கத்தாவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்த கோரமண்டல் ரயில் 2-வது தண்டவாளத்தில் வந்து, பாஹாநாகா பஜார் பகுதியில் முதலாவது தண்டவாளத் துக்கு மாறியுள்ளது. இதன்காரணமாக சரக்கு ரயில் மீது கோரமண்டல் ரயில் மோதி தடம் புரண்டது.

கோரமண்டல் ரயிலின் பெட்டிகள் 2-வது, 3-வது தண்டவாளங்களின் குறுக்காக தடம்புரண்டு நின்றன. அப்போது எதிர்திசையில் 3-வது தண்டவாளத்தில் வந்த பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில், கோரமண்டல் ரயில் பெட்டிகள் மீது பயங்கரமாக மோதியது. சில நிமிடங்களில் பாஹாநாகா பஜார் பகுதி போர்க்களமாக மாறிவிட்டது.

காலதாமதமும் விபத்துக்கு காரணம்

ஷாலிமர் – சென்னை சென்ட்ரல் கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் பிரதான தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது. ஒடிசாவின் பாஹாநாகா பஜார் பகுதியில் இணைப்பு தண்டவாளத்துக்கு ரயில் மாறியிருக்கிறது. மனித தவறு அல்லது சிக்னல் தொழில்நுட்ப கோளாறு காரணமாக இணைப்பு தண்டவாளத்துக்கு கோரமண்டல் ரயில் மாறியிருக்கலாம். இது விபத்துக்கு முக்கிய காரணம் ஆகும்.

விபத்து நேரிட்ட நாளில் பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் சுமார் 4 மணி நேரம் காலதாமதமாக சென்று கொண்டிருந்தது. அந்த ரயில் குறிப்பிட்ட நேரத்தில் பாஹாநாகா பஜார் பகுதியை கடந்து சென்றிருந்தால் கோரமண்டல் ரயில் மீது மோதியிருக்க வாய்ப்பில்லை. காலதாமதம் மிகப்பெரிய ரயில் விபத்துக்கு காரணமாக அமைந்துவிட்டதாக கூறப்படுகிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.