அகமதாபாத்: குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்து கொண்டு அந்த இயக்கத்தில் சேர திட்டமிட்டு இருந்த பெண் உள்பட 4 பேரை பயங்கரவாத தடுப்பு படை அதிரடியாக கைது செய்துள்ளது.
சிரியாவில் இருந்து செயல்படும் தீவிரவாத இயக்கம் ஐ.எஸ். இந்த பயங்கரவாத அமைப்பு சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் தங்கள் அமைப்புக்கு ஆட்களை திரட்டி வருகிறது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தினால் ஈர்க்கப்படும் அதன் ஆதரவாளர்கள் சிலர் தனி நபர் தாக்குதல்களிலும் ஈடுபடுகின்றனர். குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் இதுபோன்ற தாக்குதல்கள் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இத்தகைய தாக்குதல்கள் உலகம் முழுவதையும் அதிர வைத்து வருகிறது. ஐ.எஸ் இயக்கத்துடன் தொடர்பு உள்ளவர்கள் மற்றும் அந்த இயக்கத்தின் அனுதாபிகள் குறித்து இந்தியாவிலும் உளவு அமைப்புகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றன. இந்த நிலையில், குஜராத்தின் கடற்கரை நகரமான போர்பந்தரில் ஐ.எஸ் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்த 4 பேரை பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிரடியாக கைது செய்துள்ளது.
ஐ.எஸ் பயங்கரவாத ஆதரவு குழுவில் இந்த நான்கு பேரும் அங்கம் வகித்ததோடு, அவ்வப்போது ஒருவருக்கொருவர் தொடர்பில் இருந்துள்ளனர். இந்த நான்கு பேரும் நாட்டை விட்டு தப்பி ஓடி ஐ.எஸ் பயங்கராவாத இயக்கத்தில் சேரும் திட்டத்துடன் கடந்த ஒராண்டாக இருந்துள்ளனர். இது தொடர்பாக ரகசிய தகவல் குஜராத் பயங்கரவாத தடுப்பு படை பிரிவுக்கு கிடைத்தது.
இதையடுத்து ரகசியமாக கண்காணித்து வந்த பயங்கராவத தடுப்பு படை, அவர்கள் நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தது. அதில் ஒரு பெண்ணும் அடங்குவார். இவர்களுடன் தொடர்புடைய மேலும் ஒரு வெளிநாட்டு நபருக்கு சொந்தமான இடங்களில் ஏடிஎஸ்(பயங்கரவாத தடுப்பு படை) தீவிர சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைதான நபர்களிடம் இருந்து தடை செய்யப்பட்ட பல பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதாகவும் குஜராத் பயங்கரவாத தடுப்பு படை தெரிவித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரையும் பாகிஸ்தானில் இருந்து ஒருவர் இயக்கி வந்ததாகவும் தகவல்கள் கூறுகின்றன.
கடந்த சில தினங்களுக்கு முன்புதான் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு உள்ளதாக சந்தேகிக்கப்பட்ட நபர்கள் 3 பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு படை கைது செய்து இருந்தது. இந்த நிலையில், மீண்டும் குஜராத்தில் ஐ.எஸ் பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தவர்கள் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.