சென்னை: இயக்குநர் மாரி செல்வராஜ் பரியேறும் பெருமாள், கர்ணன் படங்களின் மூலம் சிறப்பான இயக்குநர் என்ற பெயரை பெற்றவர்.
இன்றைய தினம் அவரது இயக்கத்தில் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள மாமன்னன் படம் ரிலீசாகியுள்ளது.
இந்தப் படத்திற்கு முன்னதாக அதிகப்படியான பிரமோஷன்கள் கொடுக்கப்பட்டன. டீம் மொத்தமும் இணைந்து பல பேட்டிகளை கொடுத்தனர்.
விஜய்க்காக குழியில் விழுந்த மாரி செல்வராஜ்: நடிகர்கள் உதயநிதி, வடிவேலு, பகத் பாசில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் உருவாகி இன்றைய தினம் திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் மாமன்னன். இந்தப் படம் தற்போது சிறப்பான விமர்சனங்களை பெற்றுள்ளது. படத்தில் வடிவேலு மற்றும் பகத் பாசில் நடிப்பிற்கு நல்ல வரவேற்பு காணப்படுகிறது. உதயநிதி மற்றும் கீர்த்தி சுரேஷும் தங்களது கேரக்டர்களை சிறப்பாக செய்துள்ளதாக பாராட்டுக்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இந்தப் படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார். உதயநிதியின் கடைசி படமாக இந்தப் படம் அறிவிக்கப்பட்டுள்ளது. தான் பிற்காலத்தில் நடிக்கும் எண்ணம் ஏற்பட்டாலும் மாரி செல்வராஜ் இயக்கத்தில்தான் இணைவேன் என்று முன்னதாக ஒரு பேட்டியில் உதயநிதி தெரிவித்துள்ளார். அந்த அளவிற்கு மாரி செல்வராஜின் இயக்கம் உதயநிதிக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. இந்தப் படம் தனது கடைசி படம் என்பது தனக்கு பெருமையை அளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் இந்தப் படத்தின் பிரமோஷனுக்காக பேசிய மாரி செல்வராஜ், நடிகர் விஜய் குறித்தும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார். இந்நிலையில் தன்னுடைய பேட்டியொன்றில் தான் விஜய்க்கு கதை ஒன்றை சொன்னதாகவும் ஆனால் அவர், தனக்கு இப்படியொரு கதையா, என்று சிரித்துக் கொண்டே சென்றுவிட்டதாகவும் படத்தில் கமர்ஷியல் விஷயங்களே இல்லையே என்று கூறியதாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.
தான் விஜய்யின் படங்களை தொடர்ந்து பார்த்து வந்ததாகவும், அந்த நேரத்தில் மட்டும் தான் ஃபேன் பாயாக மாறிவிடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும் விஜய் என்பது ஒரு எமோஷன் என்றும் கூறியுள்ளார். முன்பெல்லாம் விஜய் படங்களை பர்ஸ்ட் டே பர்ஸ்ட் ஷோவாக தவறாமல் பார்த்துள்ளதாகவும் தற்போது வேலை பளு காரணமாக அதற்கான வாய்ப்புகள் கிடைப்பதில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தன்னுடைய கல்லூரி காலத்தில் நடைபெற்ற சம்பவம் ஒன்றையும் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார். தான் சட்டக்கல்லூரி என்ட்ரன்ஸ் தேர்வை சென்னையில் எழுதிவிட்டு திருநெல்வேலிக்கு சென்றதாகவும் தன்னுடைய நண்பர்கள் டிக்கெட்டு எடுத்து வைத்துக் கொண்டு தனக்காக காத்திருந்ததாகவும் அப்போது பேருந்தில் சென்றுக் கொண்டிருந்தபோது திரையரங்கத்தை பேருந்து நெருங்கியதாகவும் படம் துவங்கிவிட்டதால் உடனடியாக தான் பேருந்தில் இருந்து குதித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
அப்போது கேபிளிற்காக திரையரங்க வாசலில் வெட்டப்பட்டிருந்த ஆள் உயரத்திற்கான குழியில் தான் விழுந்துவிட்டதாகவும் பின்பு மிகுந்த சிரமப்பட்டு அந்தக் குழியில் இருந்து வெளியில் வந்து, தான் திரையரங்கிற்கு சென்று படம் பார்த்ததாகவும் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். தான் உடலெங்கும் மண்ணுடன் திரையரங்கத்திற்கு சென்றதும் தன்னுடைய நண்பர்களும் திரையரங்கத்திற்குள் இருந்தவர்களும் தன்னை ஒருமாதிரியாக பார்த்ததையும் அவர் பகிர்ந்துக் கொண்டுள்ளார்.