கள்ளக்குறிச்சி: பட்டா திருத்தம் செய்ய ரூ.10,000 லஞ்சம்; கோட்டாட்சியர் அலுவலக ஊழியர் கைது!

கள்ளக்குறிச்சி மாவட்டம், தியாகதுருகம் அருகேயுள்ள எஸ்.ஒகையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. இவருடைய நிலம் பட்டா திருத்தம் செய்வது சம்பந்தமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறதாம். அந்த வழக்கு தனக்குச் சாதகமாக வேண்டும் என்று நினைத்த மணி, பட்டா திருத்தம் மேற்கொள்வதற்காக கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலகத்தை அணுகியிருக்கிறார். பின்னர், அங்கு முதுநிலை வருவாய் ஆய்வாளராகப் பணிபுரியும் பாலு என்பவரிடம் தனது கோரிக்கையை தெரிவித்திருக்கிறார் மணி.

கைதுசெய்யப்பட்ட பாலு

அப்போது, பட்டா திருத்தம் செய்ய வேண்டுமென்றால் ரூ.10,000 லஞ்சம் தரவேண்டும் என மணியிடம் கேட்டிருக்கிறார் பாலு. இதனால் அதிர்ச்சியடைந்த மணி, அரசு அதிகாரிக்கு லஞ்சம் தர விரும்பாமல், கள்ளக்குறிச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸாரிடம் புகார் அளித்திருக்கிறார். அதன்படி, மணியிடம் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளைக் கொடுத்தனுப்பியிருக்கின்றனர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார்.

லஞ்சம்

அதை லஞ்சப் பணமாக, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் அலுவலக முதுநிலை வருவாய் ஆய்வாளர் பாலுவிடம், மணி கொடுத்தபோது, அவரும் பெற்றுக்கொண்டுள்ளார். அதை மறைந்திருந்து கண்காணித்து வந்த டி.எஸ்.பி சத்யராஜ் தலைமையிலான லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், பாலுவை கையும் களவுமாகப் பிடித்துக் கைதுசெய்தனர். இந்தச் சம்பவத்தால், அந்தப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.