கலைஞர் பேனா நினைவுச் சின்னம்: வங்கக்கடலில் கிடையாதாம்… ஸ்டாலின் எடுக்கும் புதிய முடிவு!

எழுத்தாளர், கவிஞர், பத்திரிகையாளர், சீர்திருத்தவாதி, அரசியல் தலைவர் என பன்முகங்கள் கொண்டவர் கலைஞர் கருணாநிதி. திராவிட கொள்கைகளை உயர்த்தி திரைப்பட வசனங்களுக்கு, முரசொலியில் தொண்டர்களுடன் மனம் விட்டு பேசவும், கட்சி தலைவராக, தமிழக முதலமைச்சராக புதிய மக்கள் திட்டங்களை கொண்டு வரவும் நிறைய எழுதியிருக்கிறார். இவரது எழுத்திற்கு வரலாற்றில் தனிச்சிறப்பு உண்டு.

கலைஞரின் பேனா நினைவுச் சின்னம்

எழுதி எழுதி தமிழகத்தின் தலையெழுத்தையே மாற்றி காட்டியே கலைஞரின் நினைவாக வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க முதலமைச்சர்

தலைமையிலான

அரசு திட்டமிட்டது. 2021ல் ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் இதுதொடர்பான அறிவிப்பு வெளியானது. 39 கோடி ரூபாய் மதிப்பில் 134 அடி உயரத்தில் அமைக்க திட்டமிடப்பட்டது. இது வரலாற்று சிறப்புமிக்க அடையாளமாக இருக்கும் என்று திமுக உடன்பிறப்புகள் உற்சாகத்தில் குதித்தனர்.

வலுக்கும் எதிர்ப்பு

ஆனால் அறிவிப்பு வெளியானதில் இருந்தே சர்ச்சைகள் வெடித்தன. சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது தெரியலயா, மக்கள் வரிப்பணத்தை ஏன் இவ்வளவு வீணடிக்கிறீர்களா என்றெல்லாம் சரமாரியாக கேள்வி எழுப்பத் தொடங்கினர். சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள் எனப் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

சென்னையில் கருத்து கேட்பு கூட்டம்

கடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பல்வேறு சூழலியல் ஆர்வலர்களும், மீனவர் அமைப்புகளும், அரசியல் கட்சி தலைவர்களும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். இதுதொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றம் வரை சென்று சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. இதற்கிடையில் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் வல்லுநர்கள் குழுவும், மத்திய சுற்றுச்சூழல் துறையும் பேனா நினைவுச் சின்னத்தை கடலில் அமைக்க ஒப்புதல் அளித்தது.

கலைஞரின் நினைவிடம்

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறிய மாற்றத்தை கொண்டு வர திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. வங்கக் கடலில் பேனா நினைவுச் சின்னம் வைப்பதற்கு பதிலாக கலைஞரின் நினைவிடத்தில் வைத்தால் சரியாக இருக்கும் எனக் கருதுகிறாராம். கலைஞர் நூற்றாண்டு பிறந்த நாள் அடுத்த ஓராண்டிற்கு கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது.

கலைஞர் நூற்றாண்டு விழா

சென்னையில் கலைஞர் நூற்றாண்டு நினைவு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம் எனப் பல்வேறு சிறப்புமிக்க திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் மகளிர் உரிமைத் திட்டம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வரவுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இத்தகைய பெருமைக்குரிய தருணத்தில் அரசியல் செய்ய வேண்டாம் என மு.க.ஸ்டாலின் நினைப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதுதொடர்பான தெளிவான திட்டம் உருவாக்கப்பட்டு விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.