மணிப்பூர் விவகாரம்… குடியரசு தலைவர் என்ன சொன்னார்? எதிர்க்கட்சி தலைவர்கள் சந்திப்பால் பரபரப்பு!

மணிப்பூரில் தற்போது நிலைமை எப்படி இருக்கிறது தெரியுமா? ஒரே ஒரு வீடியோ ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்த நிலையில், அங்கு நடந்து வெளியே தெரியாத விஷயங்கள் இன்னும் என்னென்ன இருக்குமோ? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது. இந்த சூழலில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் குழுவாக சமீபத்தில் மணிப்பூர் மாநிலத்திற்கு நேரில் சென்றனர். அங்குள்ள நிலைமையை ஆராய்ந்து அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளனர்.

குடியரசு தலைவருடன் சந்திப்பு

இதை குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிடம் அளிக்க நேரம் கேட்டிருந்தனர். அதன்படி, இன்று காலை டெல்லியில் உள்ள குடியரசு தலைவர் மாளிகைக்கு சென்று திரவுபதி முர்முவை சந்தித்து அறிக்கையை சமர்பித்தனர். மேலும் சில கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, மணிப்பூர் நிலவரம் குறித்து ஒவ்வொன்றாக எடுத்துரைத்தார்.

இந்தியா கூட்டணி சொன்ன விஷயம்

அதாவது, இந்தியா கூட்டணியை சேர்ந்த 31 பேர் இன்று காலை குடியரசு தலைவரை சந்தித்தோம். மணிப்பூருக்கு நேரில் சென்று பார்வையிட்ட 21 எம்.பிக்கள் அங்குள்ள நிலைமையை விளக்கினோம். பெண்களுக்கு எதிரான நடந்த வன்கொடுமைகள், வீடுகளை இழந்து தவிக்கும் மக்கள் மற்றும் சட்டம், ஒழுங்கு பிரச்சினை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைத்தோம். முகாம்கள் மிகவும் மோசமான நிலையில் இருக்கின்றன.

தயங்கும் பிரதமர் மோடி

எங்களுக்கு முதன்மையான கோரிக்கை என்பது மணிப்பூருக்கு பிரதமர் மோடி நேரில் சென்று பார்வையிட வேண்டும். அங்கு அமைதி நிலவ உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த விஷயத்தில் குடியரசு தலைவர் தலையிட்டு மோசமான நிலையில் உள்ள மணிப்பூரை இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். மேலும் பேசுகையில், மணிப்பூர் விஷயத்தில் நாடாளுமன்றத்தில் பேச பிரதமர் மோடி தயங்குவது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார்.

ஏன் விவாதிக்கவில்லை

மாநிலங்களவையில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தை அவைத்தலைவர் ஏற்கவில்லை. மணிப்பூரில் நாங்கள் நடத்திய ஆய்வு குறித்த விவரங்களை தெரிவிக்க அனுமதிக்கவில்லை. 267 தீர்மானத்தின் படி அவையில் விவாதம் நடத்த ஏன் தயங்குகின்றனர்? எனக் கேட்டார்.

குடியரசு தலைவர் சொன்னது

திமுக
எம்.பி திருச்சி சிவா பேசுகையில், மணிப்பூர் நிலவரம் குறித்து மல்லிகார்ஜுன கார்கே மற்றும் அதிர் ரஞ்சன் சவுத்ரி ஆகியோர் குடியரசு தலைவரிடம் எடுத்துரைத்தனர். நாங்களும் அறிக்கை சமர்பித்துள்ளோம். இதுபற்றி பரிசீலிப்பதாக தெரிவித்தார். விசிக எம்.பி திருமாவளவன் கூறுகையில், இந்த சந்திப்பு திருப்திகரமாக அமைந்தது எனச் சொல்லிவிட முடியாது.

திருமாவளவன் ஏமாற்றம்

ஏனெனில் உறுதியாக எந்த ஒரு பதிலையும் அளிக்கவில்லை. மணிப்பூரில் நடந்த கொடூரமான சம்பவங்கள் குறித்து குடியரசு தலைவரிடம் பெண் எம்.பி நேரில் எடுத்துரைத்தார். அதற்கு அவர் தலையை மட்டும் அசைத்தார். வேறு எதுவும் சொல்லவில்லை. எங்களை பொறுத்தவரை மணிப்பூரில் விரைவாக அமைதி திரும்ப வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.