இந்திய மக்கள்தொகையில் 18+ வயதினரில் 10.6% பேருக்கு மனநலம் பாதிப்பு: மத்திய அரசு தகவல்

புதுடெல்லி: இந்தியாவில் 18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் தொகையில் 10.6 சதவிகிதம் பேர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த தகவலை விழுப்புரம் எம்.பி டி.ரவிகுமாரின் கேள்விக்கானப் பதிலாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்துள்ளார்.

இது குறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த தகவல் பின்வருமாறு: ”2015-16-ல் தேசிய மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் மூலம் அரசு தேசிய மனநலக் கணக்கெடுப்பை நடத்தியது. நாட்டின் 12 மாநிலங்களில் அது நடத்தப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் பொதுவான மனநலக் கோளாறுகள், கடுமையான மனநலக் கோளாறுகள், மது மற்றும் போதைப்பொருள் பயன்பாட்டுக் கோளாறுகள் (புகையிலை உபயோகக் கோளாறு நீங்கலாக) உள்ளிட்ட மனநலக் கோளாறுகளின் பாதிப்பு சுமார் 10.6 சதவிகிதம் என்று அந்தக் கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தனது கேள்விகான அமைச்சரின் பதில் குறித்து விழுப்புரம் தொகுதி எம்.பி டி.ரவிகுமார் கூறும்போது, ”மனநல பாதிப்பு கொண்டவர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருந்தாலும் இந்தியா முழுவதும் மனநல மருத்துவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாக உள்ளது என்பதை அமைச்சர் அளித்த விவரம் காட்டுகிறது. ஒரு லட்சம் பேருக்கு 3 மனநல மருத்துவர் தேவை என்ற நிலையில் 1 மருத்துவர் என்ற அளவில்கூட எந்த மாநிலத்திலும் இல்லை. இதன் மீது மத்திய அரசு உடனடியாக செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.