பொங்கல் தொகுப்பு முறைகேடு புகார்; `மீண்டும் விசாரியுங்கள்'- Lokayukta-வுக்கு உத்தரவிட்ட கோர்ட்!

2022-ம் ஆண்டு, ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகையின்போது, குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,296.88 கோடி ரூபாய் செலவில் 21 பொருள்கள் அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகவும், தரமற்ற பொருள்களை விநியோகம் செய்த அதிகாரிகள் மற்றும் அமைச்சர்கள்மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரியும், திருவள்ளூரைச் சேர்ந்த ஜெயகோபி என்பவர் லோக் ஆயுக்தா அமைப்பில் புகார் மனு, தாக்கல் செய்திருந்தார்.

இந்தப் புகாரை நிராகரித்து, லோக் ஆயுக்தா 2022 மார்ச் 2-ம் தேதி உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து ஜெயகோபி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த மனுவில், `அரசு வழங்கிய பொங்கல் தொகுப்பிலிருந்த வெல்லம், கரும்பு, பருப்பு, புளி உள்ளிட்ட பொருள்கள் தரமற்றவையாக இருந்தன. அவற்றில் உயிரிழந்த பூச்சிகள் காணப்பட்டன.

கலப்பட பொங்கல் பரிசு
அமைச்சர்கள் சக்கரபாணி, பெரியசாமி

தரமற்ற பொருள்கள் வழங்கியதன் மூலம் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து, தமிழ்நாடு முதலமைச்சரிடம் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையில் தரமற்ற பொருள்களை விநியோகித்த ஒப்பந்ததாரர்கள்மீது நடவடிக்கை எடுக்க முதல்வர் உத்தரவிட்டும், அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே தரமற்ற பொருள்களை வழங்கிய அதிகாரிகள், அவற்றைத் தடுக்காத உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி ஆகியோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சேஷசாயி, அமைச்சர்களுக்கு எதிரான புகாரை தள்ளுபடி செய்து லோக் ஆயுக்தா பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், இந்தப் புகாரை மீண்டும் விசாரித்து தகுந்த உத்தரவைப் பிறப்பிக்கும்படி, லோக் ஆயுக்தாவுக்கு உத்தரவிட்டிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.