லக்னோவில் நடந்த போட்டியில் நெதர்லாந்து அணியும் ஆப்கானிஸ்தான் அணியும் மோதின. இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

இந்த வெற்றியால் ஆப்கானிஸ்தான் அரையிறுதிக்குச் செல்வதற்கான வாய்ப்பு இன்னும் அதிகரித்திருக்கிறது. இந்நிலையில் போட்டிக்குப் பிறகு பேசிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஹஸ்மத்துல்லா ஷாகிதி, உருக்கமாகச் சில விஷயங்களைப் பகிர்ந்திருக்கிறார்.

அவர் பேசியவை, “பேட்டிங், பௌலிங் என இரண்டிலுமே சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறோம். நடப்பு உலகக்கோப்பையில் மூன்றாவது முறையாக டார்கெட்டை வெற்றிகரமாக சேஸ் செய்திருக்கிறோம். டார்கெட்டை மனதில் வைத்துக் கொண்டு குறிப்பிட்ட ஓவர்களில் இவ்வளவு ரன்களை எடுக்க வேண்டும் என்கிற கணக்கையும் வைத்துக் கொண்டே சேஸிங்கை வெற்றிகரமாக முடிக்கிறோம். முகமது நபி தலைசிறந்த வீரர். அணிக்கு எப்போது தேவையோ அப்போதெல்லாம் முன் நின்று சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறார். நாங்கள் ஒரு அணியாக ஒற்றுமையாக ஒருங்கிணைந்து ஆடி வருகிறோம். எல்லாருக்குமே அணியைப் பற்றிய எண்ணம்தான் பிரதானமாக இருக்கிறது. அரையிறுதிக்குச் செல்வதற்கு எங்களால் இயன்றவரைக்கும் சிறப்பான முயற்சிகளைச் செய்வோம்.
மூன்று மாதங்களுக்கு முன்பு என்னுடைய அம்மாவை இழந்துவிட்டேன். என்னுடைய குடும்பமே ஆழ்ந்த சோகத்தில் இருக்கிறது.
நாங்கள் அரையிறுதிக்குத் தகுதிப்பெற்றுவிட்டால் அது எங்களின் நாட்டிற்கும் தனிப்பட்ட முறையில் எனக்கும் பெரிய சாதனையாக இருக்கும். நான் இங்கே ஒரு செய்தியைச் சொல்ல விரும்புகிறேன்.

ஆப்கானிஸ்தானிய அகதிகள் கடும் அவதிகளை எதிர்கொண்டு வருகின்றனர். அந்த வீடியோக்களை இணையத்தில் பார்க்கும் போதே அவர்களின் வலியை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இந்த வெற்றியை அவர்களுக்குச் சமர்பிக்கிறேன்” என்றார்.
ஆப்கானிஸ்தான் அணி அரையிறுதிக்குச் செல்லுமா என்பதைப் பற்றிய உங்களின் கருத்துகளை கமென்ட் செய்யுங்கள்.