குவஹாத்தி அரசு முறை பயணமாக நம் நாட்டுக்கு வந்துள்ள பூடான் மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், அசாமில் உள்ள காசிரங்கா தேசிய பூங்காவில் நேற்று வாகன சவாரி செய்து வனவிலங்குகளை ரசித்தார்.
நம் அண்டை நாடான பூடான் நாட்டு மன்னர் ஜிக்மே கேசர் நம்கியால் வாங்சுக், எட்டு நாட்கள் அரசு முறை பயணமாக இந்தியா வந்துள்ளார்.
புதுடில்லியில் தங்கியிருந்த அவர், வடகிழக்கு மாநிலமான அசாமிற்கு முதன்முறையாக நேற்று முன்தினம் சென்றார்.
குவஹாத்தியில் பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்ற பின், விமானம் வாயிலாக நேற்று ஜோர்ஹாத் சென்ற மன்னருக்கு, அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பின், சாலை வழியாக அவர் காசிரங்கா தேசிய பூங்காவுக்கு சென்றார்.
பூங்காவின் நுழை வாயிலான மிஹிமுக் பகுதியில் கோஹாரா பகுதி வழியாக திறந்தவெளி ஜீப்பில் சென்ற மன்னர், வனத்தின் அழகை பார்த்து ரசித்தார்.
அங்கு நடமாடிய விலங்குகளையும் மன்னர் உள்ளிட்டோர் பார்த்து ரசித்தனர். பின், யானை முகாமின் கோபுரத்தில் நின்றபடி கோஹோர் ஆற்றில் யானைகள் குளிப்பதை மன்னர் ஜிக்மே பார்வையிட்டார்.
இதையடுத்து கர்பி ஆங்லாங் மலைப்பகுதிக்கு சென்ற மன்னர் குழுவினர், சூரியன் மறையும் அழகை ஆச்சர்யத்துடன் பார்த்து ரசித்தனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement