2015-ஐ விட மோசம் ; கேவலமாக உள்ளது – விஷால் கோபம்

சென்னை : என் வீட்டிலும் மழைநீர் தேங்கியுள்ளது, 2015-ஐ விட மோசமாக உள்ளது. மழைநீர் வடிகால் என்னாச்சு, கேவலமாக உள்ளது என விஷால் வீடியோ வெளியிட்டுள்ளார்.

மிக்ஜாம் புயலால் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வெளுத்து வாங்கிய கனமழையால் சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. எங்குபார்த்தாலும் மழைநீர் தேங்கி உள்ளது. இந்நிலையில் நடிகர் விஷால் தான் வசிக்கும் அண்ணாநகர் வீட்டிலும் மழைநீர் சூழ்ந்துள்ளது என கோபமாக வீடியோ வெளியிட்டுள்ளார்.

அதில் விஷால் பேசியிருப்பதாவது : எல்லாருக்கும் தெரிஞ்ச விஷயம்தான். இப்ப பெய்யுற மழையால் முதல்ல நடக்கிற விஷயம் கரண்ட் ஆப் ஆயிடும். அப்புறம் கொஞ்ச கொஞ்சமாக தெருவுல தண்ணி தேங்க ஆரம்பிச்சிடும். அப்புறமாக இருக்கிற தண்ணி எல்லாமே வீடுகளுக்குள் புக ஆரம்பித்துவிடும்.

இப்ப நான் அண்ணா நகரில் தங்கி இருக்கேன். ஏன் வீட்டுலேயே 1 அடிக்கு வீட்டுக்குள் தண்ணி வந்துருச்சு. அண்ணா நகரிலேயே இந்த கதி என்றால் அப்புறம் யோசிச்சு பாருங்க. 2015ஐ விட மிக மோசமாக உள்ளது. சென்னை மாநகராட்சியின் மழைநீர் வடிகால் திட்டம் என்னாச்சு. நான் ஒரு வாக்காளர் என்ற முறையில் இதனை கேட்கிறேன். சென்னை தொகுதி எம்எல்ஏக்கள் தயவு செய்து வெளியில் வந்து சரிசெய்து கொடுத்தால் நன்றாக இருக்கும்.

என் வீட்டில் இருக்கும் சீனியர் சிட்டிசன்களான எனது அப்பா, அம்மா அச்சத்தில் உள்ளனர். மாநகரில் அனைத்து இடத்திலும் மழை வெள்ள நீர் தேங்குவது ரொம்ப கேவலமான விஷயம்.. எம்.எல்.ஏக்கள் இப்பவாவாது முகத்தை தொகுதி பக்கம் காட்டுங்க. உடனடியாக இதனை சரி செய்ய மாநகராட்சி முன்வர வேண்டும். ஏன் வரி கட்டுறோம் என கேள்வி கேட்க வைக்காதீங்க.

இவ்வாறு அந்த வீடியோல் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.