தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய அணித்தேர்வு குறித்து விமர்சித்த கவுதம் கம்பீர்!

கேப்டவுண்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இரு அணிகளுக்கும் இடையில் முதலாவதாக 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டி20 போட்டி மழை காரணமாக ரத்து செய்யப்பட்டது.

அதன்பின் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2வது டி20 போட்டி நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் டிஎல்எஸ் முறையில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றது.

இந்நிலையில் டி20 தரவரிசையில் நம்பர் ஒன் பவுலராக இருக்கும் ரவி பிஷ்னோய் மற்றும் ஆஸ்திரேலிய தொடரில் துணை கேப்டனாக விளையாடிய ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் இப்போட்டியில் ஏன் விளையாடவில்லை என்பதை இந்திய அணி நிர்வாகம் விளக்க வேண்டும் என கவுதம் கம்பீர் விமர்சித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “ஸ்ரேயாஸ் நீக்கப்பட்டதற்கான காரணம் எனக்கு தெரியவில்லை. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெங்களூருவில் நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் அவர் அரை சதமடித்தார். ஒருவேளை இடது கை பேட்ஸ்மேன் வேண்டும் என்பதற்காக அவர் நீக்கப்பட்டிருக்கலாம் அல்லது ஸ்ரேயாஸ் ஐயர் ஏதேனும் காயத்தை சந்தித்திருக்கலாம். இதற்கான பதிலை அணி நிர்வாகம்தான் கொடுக்க வேண்டும்.

அதேபோல உலகின் நம்பர் ஒன் டி20 பவுலராக இருப்பவரும் பிளேயிங் லெவனில் இல்லை. இது முதன்மையான இந்திய அணி அல்ல என்பதையும் மறந்து விடாதீர்கள். இத்தொடர் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுப்பதற்காக நடைபெறுகிறது. எனவே இதற்கான விளக்கத்தை சூர்யகுமார் யாதவ் மற்றும் இந்திய அணி நிர்வாகம்தான் கொடுக்க வேண்டும்” என்று கூறினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.