இந்திய அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றிருக்கும் இங்கிலாந்து அணி, இரண்டு போட்டிகளில் தோல்வியையும், ஒரு போட்டியில் வெற்றியையும் பெற்றுள்ளது. அதாவது 2-1 என இப்போது பின்தங்கியிருக்கிறது. அதுவும் கடைசியாக ராஜ்கோட் மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியில் அந்த அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியை சந்தித்தது. இது இங்கிலாந்து அணியின் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிக மோசமான இரண்டாவது தோல்வியாக அமைந்தது. இதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
பேஸ்பால் அணுகுமுறையால் இங்கிலாந்து அணி மிக மோசமான ஆட்டத்தையே வெளிப்படுத்துவதாகவும், கிரிக்கெட்டை பொறுத்தவரை வெற்றி தோல்வி தான் முக்கியம் என தெரிவித்திருக்கும் முன்னாள் வீரர்கள், பேஸ்பால் அணுகுமுறை வெற்றி பெறவில்லை என்றால் அணி வெற்றி பெறுவதற்கான பாணியை கடைபிடிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். மேலும், பேஸ்பால் கிரிக்கெட் ஆடத் தொடங்கிய பிறகு இங்கிலாந்து அணியின் வெற்றி தோல்விகளை எல்லாம் எடுத்து கூறி, பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம், கேப்டன் பென்ஸ்டோக்ஸ் மற்றும் ஜோ ரூட் ஆகியோரை வறுத்தெடுத்துக் கொண்டிருகின்றனர்.
குறிப்பாக ஆசிய கண்டத்தில் இருக்கும் கிரிக்கெட் மைதானங்களில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஜோ ரூட் கடந்த மூன்று டெஸ்ட் போட்டிகளில் 6 இன்னிங்ஸ்களில் களமிறங்கி இன்னும் மொத்தமாக 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. அந்தளவுக்கு அவரின் பேட்டிங் மிக மோசமாக இருக்கிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் 10 ஆயிரம் ரன்களுக்கும் மேல் அடித்திருக்கும் ஜோ ரூட் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினாலே சிறப்பாக ரன்களை குவிக்க முடியும் என தெரிவித்துள்ள முன்னாள் வீரர்கள், அவர் பேஸ்பால் கிரிக்கெட் எல்லாம் விளையாடவே தேவையில்லை என கூறியுள்ளனர்.
இது குறித்து இங்கிலாந்து அணியின் பயிற்சியாளர் பிரண்டன் மெக்கலம் முன்பு கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், ” ஜோ ரூட் ஒரு போட்டியில் அவுட்டானதை வைத்து அவரது திறமையை கேள்விக்குள்ளாக்குவதை நான் ஏற்க மாட்டேன். ஜோ ரூட்டுக்கு இருக்கும் திறமையையும், செய்துள்ள சாதனைகளையும் பார்த்தாலே தெரியும், அவர் இப்போது இருக்கும் நிலையிலேயே இருக்க மாட்டார் என்று. மற்றவர்கள் சொல்வதைப் போலவே ஜோ ரூட் ஆடியிருந்தால் மட்டும் எத்தனை போட்டிகளில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றிருக்கும்? என ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.