தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல்: முதல்வரின் ‘மண்ணுயிர் காப்போம்' திட்டம் அறிவிப்பு

சென்னை: அரசின் வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். மண் வளத்தை காக்க முதல்வரின் ‘மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ திட்டம், பயிர் காப்பீடு திட்டத்துக்கு ரூ,1,775 கோடி, கரும்பு டன்னுக்கு ரூ.215 ஊக்கத் தொகை ஆகியவை அதில் அறிவிக்கப்பட்டுள்ளன.

சட்டப்பேரவையில் நேற்று 4-வது ஆண்டாக வேளாண் பட்ஜெட்டை நேற்று, அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். நேற்று காலை தலைமைச்செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்ற அவர், 9.57 மணிக்கு முதல்வர் ஸ்டாலினுடன், பேரவை அரங்குக்குள் வந்தார். தொடர்ந்து, காலை 10 மணிக்கு வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்து அவர் பேசியதாவது:

2020-21ல் 1.52 கோடி ஏக்கராக இருந்த மொத்த சாகுபடி பரப்பு, 2022-23ல் 1.55 கோடி ஏக்கராக உயர்ந்தது. இதனால், உணவு தானிய உற்பத்தியும் 1 கோடியே 17 லட்சத்து 91 ஆயிரம் டன்னாக அதிகரித்துள்ளது.

நீர்நிலைகளைத் தூர்வாரியும், புனரமைத்தும், சீரமைத்தும், புதிய நீர் சேகரிப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தியும், மழைநீர் வீணாகாமல் சேகரிக்கப்பட்டு, நிலத்தடி நீர் செறிவூட்டப்பட்டது. மேலும், நுண்ணீர் பாசனம் போன்ற தொழில் நுட்ப பயன்பாட்டை அதிகரித்ததால், 2020-21ல் 89.06 லட்சம் ஏக்கராக இருந்த பாசனம் பெற்ற பயிர் பரப்பு, 2022-23-ல் 95.39 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.

கோடை மழை, தென்காசியில் மழைகுறைவால் ஏற்பட்ட மகசூல் இழப்பு, தென் மாவட்டங்களில் கடந்தாண்டு டிசம்பரில் இயற்கை பேரிடரால் ஏற்பட்ட பயிர் சேதத்துக்கு ரூ.208.20 கோடி நிவாரணம், 2.74 லட்சம் விவசாயிகளுக்கு விரைவில் வழங்கப்படும்.

கடந்த 2022-23ம் ஆண்டில் 35.12 லட்சம் ஏக்கராக இருபோக சாகுபடி பரப்பு உயர்ந்துள்ளது. நடப்பாண்டில் இயற்கை இடர்பாடுகளுக்கு இடையிலும், 1.14 கோடி ஏக்கர் பரப்பில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. 2023-24ம் ஆண்டில் 1.27 கோடி டன் உணவு தானிய உற்பத்தியை எட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

மன்னுயிர் காப்போம் திட்டம்: மண் வளத்தை பேணவும், உயிர்ம வேளாண்மை போன்ற அனைத்து வேளாண் செய்முறைகளையும் ஊக்கப்படுத்தவும், ‘முதல்வரின் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம்’ என்ற புதிய திட்டம், வரும் நிதியாண்டில் 22 திட்டங்களுடன் ரூ.206 கோடி நிதியில் செயல்படுத்தப்படும். இதில் குறிப்பாக, 2 லட்சம் விவசாயிகள் பயனடைய 2 லட்சம் ஏக்கரில் பசுந்தாள் உரம் பயிரிட ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் விளைபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்களை விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, முத்திரையிட்டு விற்பனை செய்ய ஏதுவாக 100 உழவர் அங்காடிகள், ரூ.5 கோடி மானிய நிதியில் செயல்படுத்தப்படும்.

கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம், வரும் ஆண்டில் 2,482 கிராம ஊராட்சிகளில் ரூ.200 கோடி நிதியில் தொடர்ந்து செயல்படுத்தப்படும். பயறு, துவரை, எண்ணெய் வித்து, எள், சூரிய காந்தி உள்ளிட்ட பயிர்களின் சாகுபடியில் தேவைக்கேற்ற உற்பத்தியை எட்ட ரூ.108 கோடி நிதி ஒதுக்கப் பட்டுள்ளது.

ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம்: விதைப்பு முதல்அறுவடை வரை அனைத்து தொழில்நுட்பங்கள், நிரந்தர பூச்சி கண்காணிப்பு திடல்கள் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த ஒரு கிராமம் ஒரு பயிர் திட்டம் 15,280 வருவாய் கிராமங்களில் செயல்படுத்தப்படும். தமிழ்நாடு சிறுதானிய இயக்கத்துக்கு ரூ.65.30 கோடி ஒதுக்கப்படும். 2,482 கிராம ஊராட்சிகளில் கிராம வேளாண் முன்னேற்றக் குழுக்கள் அமைக்க ரூ.2.48 கோடி, பலன் தரும் பருத்தி சாகுபடிக்கு ரூ.14.20 கோடி ஒதுக்கப்படுகிறது. இயற்கை சீற்றங்களால் விவசாயிகளுக்கு ஏற்படும் வருவாய் இழப்பில் இருந்து மீட்க, ரூ.1,775 கோடியில் பயிர்க்காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படும்.

ஊக்கத்தொகை: சர்க்கரை ஆலைகளுக்கு 2023-24 அரவைப் பருவத்துக்கு கரும்பு வழங்கிய விவசாயிகளுக்கு டன்னுக்கு ரூ.215 சிறப்பு ஊக்கத்தொகை வழங்க ரூ.250 கோடி ஒதுக்கப்படுகிறது. நோய் எதிர்ப்பு, அதிக சர்க்கரை கட்டுமானம் கொண்ட கரும்பு ரக விதைகள் வழங்க ரூ.7.92 கோடி ஒதுக்கப்படுகிறது. தோட்டக்கலைத்துறை சார்பில், நுண்ணீர் பாசன அமைப்பை 2.22 லட்சம் ஏக்கர் பரப்பில் அமைக்க ரூ.773.23 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. மா, பலா, வாழை என முக்கனி மேம்பாட்டுக்கான சிறப்பு திட்டத்தை செயல்படுத்த ரூ.41.35 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. செங்காந்தள், மருந்துக்கூர்க்கன், சென்னா, நித்திய கல்யாணி போன்ற மூலிகை பயிர்களின் சாகுபடியை ஊக்குவிக்க ரூ.5 கோடி நிதி ஒதுக்கப்படும். தமிழகத்தில் 26,179 விவசாயிகளுக்கு ரூ.170 கோடி நிதியில் வேளாண் இயந்திரங்கள், கருவிகள் மானியத்தில் வழங்கப்படும்.

விதைச்சான்று மற்றும் அங்ககச்சான்றுத்துறை இனி விதைச்சான்றளிப்பு மற்றும் உயிர்மச் சான்றளிப்புத் துறை என பெயர் மாற்றம் செய்யப்படும். பெரம்பலூர், தூத்துக்குடி, கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், தருமபுரி, திண்டுக்கல், விருதுநகர் மாவட்டங்களில் இயற்கை வள மேம்பாட்டுப் பணிகளுக்காக ரூ.43 கோடி ஒதுக்கப்படும்.

கூட்டுறவுத்துறை: கூட்டுறவு பயிர்க்கடன் வழங்க ரூ.16,500 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, வட்டி மானியத்துக்கு ரூ.700 கோடி நிதி ஒதுக்கப்படுகிறது. ஆடு, மாடு, கோழி வளர்ப்போருக்கான முதலீட்டு கடன் வட்டி மானியத்துக்கு ரூ.200 கோடி, கூட்டுறவு வங்கி கணினிமயமாக்கத்துக்கு ரூ.141 கோடி ஒதுக்கப்படுகிறது. உணவு பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், உணவு மானியத்துக்கு ரூ.10,500 கோடியும், தமிழக அரசின் நெல் கொள்முதல் ஊக்கத் தொகை வழங்க ரூ.500 கோடியும் ஒதுக்கப்படுகிறது.

காவிரி டெல்டா பகுதிகளில் 5,338 கிமீ நீளம் கொண்ட ஆறுகள், கால்வாய்கள், வாய்க்கால்கள் ரூ.110 கோடியில் தூர்வாரப்படும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தில் பண்ணை குட்டைகள், கசிவுநீர் குட்டைகள் போன்ற இயற்கை வள மேம்பாட்டுப்பணிகளுக்காக ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 23.51 லட்சம் வேளாண் பாசன இலவச மின் இணைப்புகளுக்கு, மின்கட்டண தொகையாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்துக்கு ரூ.7,280 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வேளாண் துறையின் திட்டங்களுக்காக மொத்தம் ரூ.42,281 கோடியே 88 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.

முக்கிய அம்சங்கள்

  • வேளாண் பட்ஜெட் மொத்த நிதி ரூ.42,281.88 கோடி
  • ஒரு கிராமத்தில் ஒரு பயிர்
  • சிறுதானிய இயக்கம்
  • உணவு மானியமாக ரூ.10,500 கோடி ஒதுக்கீடு
  • இயற்கை வள மேம்பாட்டுக்கு ரூ.7,000 கோடி
  • தேவைக்கேற்ப வேளாண் பயிர் பரப்பு விரிவாக்கம்
  • முக்கனி மேம்பாட்டுக்கு சிறப்பு திட்டம்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.