தஞ்சாவூர் மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே வண்டுவாஞ்சேரி கிராமத்தை சேர்ந்தவர் மதியழகன். இவரின் மகன் திலீபன், வயது 20. கூலிவேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் 10ம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமி ஒருவரும், திலீபனும் காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இதையறிந்த அந்த சிறுமியின் தாய், `திலீபன் உனக்கு அண்ணன் முறை வேண்டும், உன்னை கஷ்டப்பட்டு வளர்க்கிறேன். இது வெளியே தெரிந்தால் எல்லோரும் தவறாக பேசுவார்கள், அவனிடமிருந்து நீ விலகி விடு’ என கூறியதாக சொல்லப்படுகிறது.
மதியழகனும் திலீபனிடம், `தங்கை உறவு முறை உடையவளை காதலிக்கிறாய். இது தவறு’ என கண்டித்துள்ளார். இந்நிலையில் அந்த சிறுமி திலீபனிடம் பேசுவதை தவிர்த்துள்ளார். இதைத்தொடர்ந்து கடந்த 22ம் தேதி இரவு வெளியே சென்ற தன் மகள் நீண்ட நேரமாகியும் வரவில்லை என சிறுமியின் அம்மா தேடியிருக்கிறார். அப்போது திடல் பகுதியில் உள்ள அறுவடை செய்யப்பட்ட வயலில் உடல் முழுக்க ரத்த காயங்களுடன் சிறுமி இறந்து கிடந்துள்ளார்.
அருகே உள்ள மரத்தில் திலீபனும் தூக்கில் சடலமாக தொங்கியுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிறுமியின் அம்மா அலறியிருக்கிறார். அந்த சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து பார்த்துடன், போலீஸாருக்கு தகவல் கொடுத்துள்ளனர். உடனே சம்பவ இடத்துக்கு வந்த நாச்சியார் கோயில் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சுகுணா உள்ளிட்டோர், சம்பவ இடத்தில் கிடந்த இருவருடைய பொருள்களையும் கைப்பற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இருவரின் உடலையும் கைபற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இருவர் உயிரிழந்த விவகாரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்து விசாரித்த போது, திலீபனும், அந்த சிறுமியும் காதலித்ததை இரு குடும்பத்தினரும் கண்டித்துள்ளதாக தெரிகிறது. இந்த நிலையில் அந்த சிறுமிக்கு செல்போன் வாங்கி கொடுத்துள்ளான் திலீபன். வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பி இருவரும் காதலை தொடர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் காதலுக்கு சிறுமியின் வீட்டில் கடுமையான எதிர்ப்பு கிளம்ப, சிறுமி அவனிடம் இருந்து விலகியதாக சொல்லப்படுகிறது.
இதைதொடர்ந்து 22-ம் தேதி இரவு, `எனக்கு பிறந்தநாள் நீ வர வேண்டும்’ என திலீபன், சிறுமியை அழைக்க அவளும் நம்பி சென்றுள்ளார். அப்போது திலீபன் போதையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. அப்போது தான் சிறுமியை கடுமையாக தாக்கி அறுவடை செய்யப்பட்ட வயலில் தலைக்குப்புற போட்டு அடித்துள்ளான். இதில் அவர் உயிரிழந்து விட்டார். இதைதொடர்ந்து என்ன செய்வதென்று தெரியாத அவனும் தூக்கு போட்டு கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
அவர் தனக்கு கிடைக்கமாட்டாள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இப்படி செய்திருப்பான் என்றே அவனை அறிந்தவர்கள் சொல்கிறார்கள். உடற்கூறாய்வு அறிக்கை வந்த பிறகு அதை வைத்து விசாரணை நடத்தினால் தான் உண்மை வெளிவரும் என்கிறார்கள்.
இது குறித்து விசாரணையில் உள்ள போலீஸ் தரப்பில் பேசினோம், `உடற்கூறாய்வு ரிப்போர்ட் வந்த பிறகு, மருத்துவரின் கருத்தை அறிந்து அதன்படி விசாரணை மேற்கொள்ள இருக்கிறோம். பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்ததற்கான வாய்ப்போ தடயமோ இல்லை. இருந்தாலும் அந்த சந்தேகத்தின் பேரிலும் விசாரணை செய்து வருகிறோம்’ என்றனர்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY