தலீபான்களால் கைது செய்யப்பட்ட ஆஸ்திரிய முதியவர் ஓராண்டுக்கு பின் விடுதலை

காபுல்,

ஆப்கானிஸ்தானில் கடந்த 2021ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றினர். இதனால், அதிபர் அஷ்ரப் கானி நாட்டில் இருந்து தப்பியோடினார். தலீபான்கள் ஆட்சியை கைப்பற்றியபின் அந்நாட்டில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. பல வெளிநாட்டு தூதரகங்கள் மூடப்பட்டன.

அதேபோல், பெண்கள் பொதுஇடங்களுக்கு செல்லவும் தலீபான்கள் தடைவிதித்தனர். பெண்கள் 6ம் வகுப்புக்குமேல் படிக்கவும் தடை விதிக்கப்பட்டது. இதனிடையே, ஆப்கானிஸ்தானுக்கு சுற்றுலா சென்ற ஆஸ்திரியா நாட்டை சேர்ந்த 84 வயதான ஹெர்பெட் பிரிட்ஸ் என்ற முதியவரை தலீபான்கள் கைது செய்தனர். அவர் ஓராண்டுக்குமேல் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விடுதலை செய்ய ஆஸ்திரிய அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வந்தது.

இந்நிலையில், ஓராண்டுக்குமேல் ஆப்கானிஸ்தான் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஹெர்பெட் பிரிட்சை தலீபான்கள் தற்போது விடுதலை செய்தனர். ஹெர்பெட் பிரிட்ஸ் கத்தார் தலைநகர் தோஹாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் ஆஸ்திரியா செல்ல உள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.