தென்மேற்கு பருவமழை | சென்னை, திருச்சி, கோவைக்கு குறைவான மழை: வேளாண் பல்கலை. கணிப்பு

கோவை: தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை அனைத்து மாவட்டங்களிலும் சராசரியாக பெய்யும் என தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: நடப்பாண்டின் தென்மேற்கு பருவமழைக் காலத்துக்கான (ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை) மழை பற்றிய முன்னறிவிப்பு செய்வதற்காக தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்திலுள்ள, வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம், பயிர் மேலாண்மை இயக்கத்தில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இதற்காக மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பசிபிக் பெருங்கடலில் பூமத்தியரேகையை ஒட்டியுள்ள கடற்பகுதியின் மேற்பரப்பு நீரின் வெப்பநிலை மற்றும் தென் மண்டல காற்றழுத்த குறியீடு ஆகியவற்றை உபயோகித்து ஆஸ்திரேலிய நாட்டிலிருந்து பெறப்பட்ட மழை மனிதன் என்னும் கணிணி கட்டமைப்பைக் கொண்டு 2024-ம் ஆண்டுக்கான தென்மேற்குப் பருவமழை முன்னறிவிப்பு பெறப்பட்டது.

இந்த ஆண்டு தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சராசரி மழையளவு எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல சென்னை, கோவை, மதுரை, திருச்சி, திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டங்களில் எதிர்பார்க்கப்படும் மழை அளவு சராசரி அளவை விட குறைவாகவே பெய்யும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.