பாலிவுட்டில் 2019ம் ஆண்டு வெளியான `ஸ்டூடண்ட் ஆஃப் தி இயர் 2′ திரைப்படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட நடிகை அனன்யா பாண்டே, அவரது தோற்றத்துக்காக பெரிதும் விமர்சிக்கப்பட்டார்.
இன்று, முன்னணி நடிகையாக வளர்ந்துள்ள அவர், கடந்த ஆண்டு வெளியான CTRL படத்துக்காக வெகுவாக பாரட்டப்பட்டார். இப்போது அவர் நடிப்பில் வெளியாகியுள்ள கேசரி 2 திரைப்படம் திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுவருகிறது.

இந்தத் தருணத்தில் சமீபத்தில் யூ-டியூப் பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட அனன்யா பாண்டே, தான் கடந்து வந்த கடுமையான விமர்சனங்கள், ஏளனங்கள் பற்றி மனம் திறந்து உரையாடியுள்ளார்.
‘மார்பகங்கள் இல்லை, பின்பக்கம் சதைப்பற்று இல்லை’
“நான் என் பயணத்தைத் தொடங்கும்போது எனக்கு 18-19 வயதிருக்கும். உங்களுக்குத் தெரியும் அப்போது நான் மிகவும் ஒல்லியாக இருந்தேன், எல்லோருமே அதுகுறித்து கிண்டல் செய்தனர். ‘ஓ… உனக்கு இருப்பது கோழி கால்கள், நீ தீக்குச்சி போல இருக்கிறாய், உனக்கு மார்பகங்கள் இல்லை, பின்புறம் சதைப்பற்று இல்லை’ என முதலில் கிண்டல் செய்தனர். பின்னர், நான் வளர வளர இயற்கையாகவே என் உடல் (தசையால்) நிரம்பியது. இப்போதோ, ‘இவளுக்கு எப்படி பின்புறம் வந்தது, எப்படி இது வந்தது அது வந்தது…’ என்கின்றனர். இதில் நாம் வெல்லவே முடியாது” என்றார்.
மேலும் அவர், “நாம் எப்படி இருந்தாலும், எப்போதும் நம்மை விமர்சிக்க மக்களுக்கு எதாவது இருக்கும். குறிப்பாக பெண்களை விமர்சிக்க, ஆண்கள் இதனை அடிக்கடி எதிர்கொள்வதில்லை.” என்றார்.

“பாலிவுட்டும் தான் காரணம்!” – Ananya Pandey
அத்துடன் அனன்யா யதார்த்தத்துக்கு சரிவராத அழகு தர-நிலைகளைக் கட்டமைத்ததற்காக பாலிவுட்டை குறைகூறினார்.
“நாம் நம்பமுடியாத அழகு தரநிலைகளை நிர்ணயித்ததனால் இது நம்முடைய தவறும் கூட என உணர்கிறேன்.” என்றவர், ஒரு நடிகையாக தானும் பாடல்களிலும் திரைப்படங்களிலும் தவறானவற்றை வெளிப்படுத்தியிருப்பதாகக் கூறியுள்ளார். “இதையெல்லாம் எங்காவது சமநிலை செய்யவேண்டும்.” என்றும் தெரிவித்துள்ளார்.
“நீங்கள் அதைப்பற்றி (Beauty Standards) பேச வேண்டும், அது உண்மையில்லை என்பதைத் தெரிவிக்க வேண்டும். நானும் அப்படி இல்லை. கேமராவுக்கு வெளியில் அழகு தரநிலைகளைப் பின்பற்றாமல் இருப்பதன்மூலம் அதை சமநிலைப்படுத்த விரும்புகிறேன்” எனக் கூறியுள்ளார்.