சிங்கப்பூர்,
சிங்கப்பூர் நாட்டின் தோ பாயோ பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இந்திய வம்சாவளியை சேர்ந்த சண்முகானந்தம் ஷியாமலா (வயது 70) என்ற பெண் வசித்து வருகிறார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு தனது வீட்டிற்கு அருகே புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். சிங்கப்பூரில் பொதுவெளியில் பறவைகள், விலங்களுகளுக்கு உணவு அளிக்க வேண்டுமென்றால் வனவிலங்குகள் மேலாண்மை அதிகாரியிடமிருந்து அனுமதி சான்றிதழ் பெற வேண்டும். ஆனால், ஷியாமலா எந்த வித அனுமதியுமின்றி வீட்டில் புறாக்களுக்கு உணவு அளித்துள்ளார். இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் ஷியாமலாவை 2020ம் ஆண்டே கோர்ட்டு எச்சரித்து அனுப்பியது. ஆனால், ஷியாமலா தொடர்ந்து புறாக்களுக்கு உணவு அளித்து வந்துள்ளார்.
இந்நிலையில், இது தொடர்பாக ஷியாமலா மீது மீண்டும் புகார் அளிக்கப்பட்டது. புகாரை விசாரித்த சிங்கப்பூர் கோர்ட்டு, சட்டவிரோதமாக புறாக்களுக்கு உணவு அளித்ததாக ஷியாமலாவுக்கு 1,200 சிங்கப்பூர் டாலர்கள் (இந்திய மதிப்பில் சுமார் 80 ஆயிரம் ரூபாய்) அபராதம் விதித்துள்ளது.