ஜகர்த்தா,
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில், பதிலடியாக, இரு வாரங்களுக்கு பின்னர் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மீது இந்திய ராணுவம் பயங்கரவாத இலக்குகளை குறிவைத்து, தாக்குதலை நடத்தியது. பாகிஸ்தானில் செயல்பட்ட 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகளை இலக்காக கொண்டு இந்திய ஆயுத படைகள் சார்பில் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த சம்பவத்திற்கு பின்பு, இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் பதற்ற சூழல் உருவானது. 4 நாட்களுக்கு பின்னர் இரு நாடுகளும் போர் நிறுத்த முடிவுக்கு வந்தன. பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்துவது இந்தியாவின் நோக்கமல்ல என கூறிய மத்திய அரசு, பயங்கரவாதிகளுக்கு எதிராகவே நடவடிக்கை எடுக்கப்பட்டது என தெரிவித்தது.
இதனை தொடர்ந்து, பல்வேறு கட்சிகளை சேர்ந்த பிரதிநிதிகள் அடங்கிய 7 பேர் கொண்ட குழுவை வெளிநாடுகளுக்கு அனுப்பி இந்தியாவின் நிலைப்பாட்டை விளக்க அரசு முடிவு செய்து அதன்படி, அவர்கள் குழுவாக சென்று அந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், ஐக்கிய ஜனதா தள கட்சியின் எம்.பி. சஞ்சய் குமார் ஜா தலைமையிலான அனைத்து கட்சி பிரதிநிதிகள் கொண்ட குழுவில் பா.ஜ.க. எம்.பி. அபராஜிதா சாரங்கியும் ஒருவராவார். அவர், இந்தோனேசியாவில் பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் பற்றி இன்று பேசும்போது, பெண்களின் கண் முன்னே அவர்களுடைய கணவர்களை பயங்கரவாதிகள் படுகொலை செய்தது, மனித இனத்திற்கு எதிரான குற்ற செயல் என குறிப்பிட்டார்.
இந்தியா அமைதியை விரும்பும் நாடு என்றும் வன்முறை, பயங்கரவாதம் ஆகியவற்றை விரும்பாது என கூறிய அவர், 2047-ம் ஆண்டுக்குள் வளர்ந்த ஒரு நாடாக உருவாக இந்தியா விரும்புகிறது என்றும் பேசியுள்ளார். நாட்டின் பெண்களுக்கு இந்தியா துணை நிற்கிறது என சர்வதேச சமூகத்திற்கு எடுத்து கூறுவதற்காக, ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தியா பொருளாதார வளர்ச்சியில், ஜப்பானை பின்னுக்கு தள்ளி, 4-வது பெரிய பொருளாதார நாடாக வளர்ச்சியடைந்து உள்ளது என்றும் அப்போது அவர் சுட்டிக்காட்டினார். அடுத்து, இரண்டரை முதல் 3 ஆண்டுகளில் 3-வது பெரிய நாடாக இந்தியா உருவெடுக்கும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் இந்தியாவுக்கு இந்தோனேசியா உறுதுணையாக இருக்க வேண்டும் என்றும் அவர் அப்போது கேட்டு கொண்டார்.