புதுடெல்லி: தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன.
இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் போலீஸார் விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாத தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கைது செய்வதற்காக, போலீஸார் 10 நாட்கள் சிறப்பு தேடுதல் வேட்டையை அண்மையில் தொடங்கினர்.
அதன்படி நேற்று வரை 92 வங்கதேச நாட்டவர் கைது செய்யப்பட்டதாக போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இவர்கள் அனைவரும் தென் மேற்கு டெல்லியில் பகுதியில் வசித்து வந்துள்ளனர். கடந்த டிசம்பர் முதல் தற்போது வரை 142 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுகுறித்து டெல்லி போலீஸ் துணை கமிஷனர் சுரேந்திர சவுத்ரி கூறும்போது, “தென் மேற்கு டெல்லியில் உள்ள சரோஜினி நகர், கிஷண்கர், சப்தார்ஜங் என்கிளேவ், வசந்த் கஞ்ச், கபாஷெரா, பாலம், டெல்லி கண்டோன்மெண்ட், சாகர்பூர் பகுதிகளில் சோதனை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேச நாட்டு மக்களைக் கைது செய்துள்ளோம்.
பலரிடம் வங்கதேச நாட்டைச் சேர்ந்த ஆவணங்கள் இருந்தன. மேலும், வங்கதேசத்திலிருந்து இந்தியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்ததை அவர்கள் ஒப்புக்கொண்டுள்ளனர்” என்றார்.