மும்பை: மகாராஷ்டிராவில் கடந்த ஐந்து நாட்களாக கனமழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்துள்ளதாக மாநில அரசு தெரிவித்துள்ளது. இவர்கள் நிலச்சரிவு, இடி, மின்னல் தாக்குதல், மரம் அல்லது கட்டிடம் இடிந்து விழுதல் போன்ற சம்பவங்களால் உயிரிழந்தனர்.
இந்த ஆண்டு வழக்கத்தை விட 8 நாட்களுக்கு முன்பாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கியது. அதன்படி பருவமழை தொடங்கிய மே 24-ல் இருந்தே மகாராஷ்டிராவில் கனமழை பெய்து வருகிறது. மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளும் கனமழையால் பாதிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, மழை தொடங்கிய முதல் நாளில் இருந்து இதுவரை மழை தொடர்பான சம்பவங்களால் 16 பேர் உயிரிழந்தனர்.
இது குறித்த மகாராஷ்டிர அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘புனேவில் மூன்று பேர் உயிரிழந்தனர். தானே, லத்தூர் மற்றும் பாந்தராவில் தலா இரண்டு பேர் உயிரிழந்தனர். ராய்காட், அகில்யாநகர், நாக்பூர், வர்தா, சந்தர்பூர், மும்பை புறநகர், கோண்டியா மாவட்டங்களில் தலா ஒரு உயிரிழப்பு பதிவாகியுள்ளது. இதனிடையே, மே 24-ம் தேதி முதல் மழை தொடர்பான சம்பவங்களால் 18 பேர் காயமடைந்துள்ளனர். மாநிலத்தில் நிலவி வரும் தீவிர வானிலை காரணமாக 41 விலங்குகள் உயிரிழந்துள்ளன’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.