அலிப்பூர்துவார்: வன்முறைச் சம்பவங்கள், பெண்களுக்கு எதிரான கொடுமைகள், வேலைவாய்ப்பின்மை, ஊழல், உரிமைகள் பறிப்பு என 5 பிரச்சினைகளால் மேற்கு வங்கம் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாநில மக்கள் அரசியல் மாற்றத்தை விரும்புவதாகத் தெரிவித்தார்.
மேற்கு வங்கத்தின் அலிப்பூர்துவாரில் நகர எரிவாயு விநியோகத் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டிய பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்ற மக்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தின் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியை கடுமையாக விமர்சித்தார். மேலும், மக்கள் மாற்றத்தை விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார்.
“இன்று, மேற்கு வங்கம் தொடர்ச்சியான நெருக்கடிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் ‘கொடூர அரசாங்கத்தை’ விரும்பவில்லை. அவர்கள் மாற்றத்தையும், நல்லாட்சியையும் விரும்புகிறார்கள். அதனால்தான் முழு வங்காளமும் இனி கொடுமை மற்றும் ஊழலையும் விரும்பவில்லை என்று கூறுகிறது.
மேற்கு வங்கம் 5 முக்கிய பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளது. முதலாவதாக, பரவலாக நடைபெற்று வரும் வன்முறைச் சம்பவங்கள். இதனால், மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு இல்லாத நிலை உள்ளது.
இரண்டாவது, தாய்மார்கள் மற்றும் சகோதரிகளிடையே வளர்ந்து வரும் பாதுகாப்பற்ற உணர்வு. அவர்களுக்கு எதிராக நடத்தப்படும் கொடூர குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
மூன்றாவது நெருக்கடி, அதிகரித்து வரும் வேலையின்மை. வேலை வாய்ப்புகள் இல்லாததால் இளைஞர்கள் விரக்தி அடைந்திருக்கிறார்கள்.
நான்காவது பரவலான ஊழல். இது அரசு எனும் அமைப்பின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை சிதைக்கிறது.
ஐந்தாவது நெருக்கடி, ஆளும் கட்சியின் சுயநல அரசியலில் இருந்து உருவாகிறது, இது ஏழைகளின் உரிமைகளைப் பறிக்கிறது. முர்ஷிதாபாத் மற்றும் மால்டாவில் நடந்த சம்பவங்கள், டி.எம்.சி அரசாங்கத்தின் கொடுமைக்கும், சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கத் தவறியதற்கும் தெளிவான எடுத்துக்காட்டுகள்.
மேற்கு வங்க ஆசிரியர் ஆட்சேர்ப்பில் நிகழ்ந்த ஊழல் மற்றும் முறைகேடுகள், ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்களின் எதிர்காலத்தை அழித்துவிட்டது.
இது சில ஆயிரம் ஆசிரியர்களின் அழிவு மட்டுமல்ல, முழு கல்வி முறையும் சீரழிந்து வருகிறது. இப்போது கூட, டி.எம்.சி தனது தவறுகளை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. மாறாக, அவர்கள் நீதிமன்றங்களையும் நீதித்துறை அமைப்பையும் குறை கூறுகிறார்கள்.
மேற்கு வங்கத்தின் இளைஞர்களும் ஏழைகளும் நடுத்தர வர்க்க குடும்பங்களும் இந்த ஊழலின் சுமையைச் சுமந்து வருகின்றன. மேற்கு வங்க மக்கள் இப்போது டி.எம்.சி அரசாங்கத்தின் மீது நம்பிக்கையை இழந்துவிட்டனர்.
மேற்கு வங்க அரசு சமீபத்திய நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளாதது ஏமாற்றம் அளித்தது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி வளர்ச்சியை விட அரசியலில் அதிக ஆர்வம் காட்டுகிறது.” என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டினார்.