இந்தியா பாகிஸ்தானைத் தாக்கியது என்பதை முன்னர் ஒத்துகொள்ளாமல் இருந்த பாகிஸ்தானின் பொய் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதுவும் அவர்களின் வாயில் இருந்தே உண்மை வெளிவந்து கொண்டிருக்கிறது.
இரு வாரங்களுக்கு முன்னால், பாகிஸ்தானை இந்தியா தாக்கியது என்று பேசியிருந்தார் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப். இப்போது மீண்டும் அதை உறுதி செய்துள்ளார் ஷெபாஸ் ஷெரீப்.

அஜர்பைஜானில் பேசிய இவர், “மே 9 – 10 நள்ளிரவில், ஃபஜ்ர் பிரார்த்தனைக்குப் பிறகு, நாங்கள் இந்தியாவைத் தாக்க திட்டமிட்டு இருந்தோம். ஆனால், அதற்கு முன்பாகவே, இந்தியாவின் பிரமோஸ் ஏவுகணைகள் பாகிஸ்தானின் ராவல்பிண்டி விமான நிலையம் உள்ளிட்ட பல இடங்களைத் தாக்கியது” என்று கூறியுள்ளார்.
கடந்த ஏப்ரல் 22-ம் தேதி பஹல்காமில் நடந்த தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக, மே 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூரை நடத்தியது இந்திய ராணுவம். இந்த ஆபரேஷனில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 தீவிரவாத முகாம்களைக் குறி வைத்து இந்தியா அழித்தது.

இதற்கு பாகிஸ்தான் ராணுவம், இந்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தி எதிர்வினை ஆற்றியது. இதற்கு இந்தியா பதிலடி கொடுக்க, இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு அதிகமானது. பின்னர், மே 10-ம் தேதி இரு நாடுகள் தாக்குதல் நிறுத்தத்தை அறிவித்தன.
ஆனால், அப்போதெல்லாம் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது என்பதை ஒத்துக்கொள்ளாத பாகிஸ்தான், இப்போது உண்மையை பேசுகிறது.