குன்னூர்: நீலகிரி மாவட்டத்தில் கோடை விழாவின் முக்கிய நிகழ்வுகளான காய்கறி கண்காட்சி, மலர்கள் கண்காட்சி, ரோஜா கண்காட்சி மற்றும் பழக்கண்காட்சி ஆகியவை நிறைவு பெற்றுள்ளன. இந்நிலையில், இறுதி நிகழ்ச்சியாக குன்னூர் காட்டேரி பூங்காவில் இந்த ஆண்டு முதல்முறையாக மலைப் பயிர்கள் கண்காட்சி இன்று (மே. 30) தொடங்க உள்ளது.
இது தொடர்பாக தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறியதாவது: மலைப் பயிர்கள் கண்காட்சிக்காக, காட்டேரி பூங்காவில் இரண்டு லட்சம் மலர் நாற்றுகள் நடவு செய்யப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இது மட்டுமில்லாமல் ஆயிரக்கணக்கான தொட்டிகளில் பல்வேறு வகையான மலர்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளன. மேலும், பனை, கோகோ, இளநீர் வைத்து பனை குடிசை அமைக்கப்பட்டுள்ளது. தேயிலை, காபி, ரப்பர், வெற்றிலை, பாக்கு உட்பட 10 வகையான மலைப் பயிர்களைக் கொண்டு, பல்வேறு வடிவமைப்புகள் வைக்கப்படுகின்றன. இவ்வாறு அவர்கள் கூறினர்.