ஹைதராபாத்: உலகிலேயே அதிக நெல் உற்பத்தி செய்யும் 2-வது பெரிய நாடாக இந்தியா உள்ளது. நெல்உற்பத்தியில் உரத்தின் பங்கு மிக முக்கியமானதாகும். உரங்கள் நெல்லுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை வழங்குகின்றன. உறை கருகல் நோயை ஆரம்பத்திலேயே கண்டு பிடித்து தடுக்காவிட்டால், நெல் வளர்ச்சி 40 முதல் 50 சதவீதம் வரை பாதிக்கப்படும் என்கிறது விவசாயத் துறை. இதற்கு தீர்வு ஏற்படுத்தும் வகையில், பிஏஎஸ்எப் நிறுவனம் தனது மும்பை, புனே ஆய்வகங்களில் தொடர்ச்சியாக நடத்திய ஆய்வில் புதிய ரசாயன திரவங்களை கண்டுபிடித்துள்ளது.
இதுகுறித்து, பிஏஎஸ்எப் தெற்காசிய நிர்வாக இயக்குநர்கள் குழுவின் உறுப்பினர் மைக் ஹெய்ன்ஸ், மூத்த துணைத் தலைவர்கள் மார்கோ க்ரோஸ்டானோவிக், சிமோன் பார்க், பிஏஎஸ்எப் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் அலெக்சாண்டர் கெர்டிங், பிஏஎஸ்எப் இந்தியாவுக்கான வேளாண் தீர்வுகள் பிரிவின் வணிக இயக்குநர் கிரிதர் ரனுவா ஆகியோர் ‘வேலெக்சியோ’ மற்றும் ‘மிபிலியா’ என்ற புதிய ரசாயன திரவங்களை ஹைதராபாத்தில் நடந்த நிகழ்ச்சியில் வெளியிட்டனர். பின்னர் அவர்கள் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 130 ஆண்டுகளுக்கும் மேலாக விவசாயத்துறையுடன் இணைந்து செயல்படும் எங்களது பிஏஎஸ்எப் என்ற பிரபல ரசாயன உற்பத்தி நிறுவனம், ‘வேலெக்சியோ’ மற்றும் ‘மிபிலியா’ என்ற இரண்டு நவீன ரசாயன திரவங்களை வெளியிட்டுள்ளது.
இந்தியாவிலேயே கண்டுபிடிக்கப்பட்ட ‘வேலெக்சியோ’ என்ற பூச்சிக்கொல்லி திரவம், தாவரங்களின் முழு வளர்ச்சியையும், அறுவடை காலம்வரை பூச்சிகளிடமிருந்து முழு பாதுகாப்பையும் வழங்கும் பிரெக்ஸியோ ஆற்றல் கொண்டதாக இருக்கும். அதேபோல ‘மிபிலியா’ என்ற பூஞ்சாணக்கொல்லி, ரெவிசால் ரசாயனத்தில் முதன்மையானது. இந்திய சுற்றுச்சூழலுக்கு ஏற்ப நெல் பயிர்களுக்கு முழுமையான வளர்ச்சியும், பூஞ்சாண நோயிலிருந்து பாதுகாப்பும் வழங்குகிறது.
இதுதொடர்பாக நாங்கள் நடத்திய ஆய்வுகளில், வேலெக்சியோ மூலம் நெல் பயிர்களுக்கு மிகச் சிறப்பான வளர்ச்சி கிடைப்பது உறுதி ஆனது. லெக்சியோ தெளிக்கப்பட்ட நெல் வயல்களில் பயிர்கள் வலுவான தண்டு, சிறப்பான இழை தன்மை வளர்ச்சி, அடர்த்தியான வேர்கள் மற்றும் அகலமான கொடி (கண்ணாடி இலை) இலைகளுடன் வளர்வதால், நெல் விவசாயிகளுக்கு அதிக மகசூல் கிடைக்கும் என உறுதியளிக்கிறோம். மேலும், இந்த பூஞ்சாணக்கொல்லி, நெல்லில் இலையுறைக்கருகல் நோய் மற்றும் டர்ட்டி பானிகல் நோய்களை விரைவாகக்கட்டுப்படுத்தி, நீண்ட காலத்திற்குப் பாதுகாப்பு வழங்கும். இந்த இரு ரசாயன திரவங்களும் இந்தியாவில் நெல் பயிர்களை பூச்சிகளின் தாக்குதலில் இருந்தும், சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்தும் பாதுகாத்து நெல் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் என்பதில் ஐயமில்லை.
‘மேட் இன் இந்தியா’ திட்டத்தில் புனே மற்றும் மும்பையில் உள்ள ஆய்வகத்தில் தயாரிக்கப்பட்ட வேலெக்சியோ, உலக சந்தையிலும் கால் பதிக்கிறது. நெல் பயிரில் நோய் தாக்குதலை தடுக்காவிட்டால், 25 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை இழப்பு ஏற்படலாம். அதனால், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப இந்த பருவத்தில், நெல் நடவு தொடங்கும் போது, வேலெக்சியோ பூச்சிக்கொல்லி மற்றும் மிபிலியா பூஞ்சாணக்கொல்லி ஆகியவை ஜூன் மாதத்திலிருந்து சந்தையில் கிடைக்கும், என்றனர்.
விலை விவரம்: ‘வேலெக்சியோ’ 60 மிலி கொண்ட ரசாயன திரவத்தின் விலை ரூ.1,755. இது ஒரு ஏக்கருக்கு போதுமானதாக இருக்கும். 120 மிலி கொண்ட திரவத்தின் விலை ரூ.3,360. அதேபோல, 300 மிலி கொண்ட திரவத்தின் விலை ரூ. 7,920. ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு தேவையான மிபிலியா திரவத்தின் 120 மிலி விலை ரூ.1,092. அதேநேரத்தில் 360 மிலி கொண்ட திரவத்தின் விலை ரூ.3,096.உலகில் நெல் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா மிகப்பெரிய பங்கு வகிக்கிறது. குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் 100 மில்லியன் மெட்ரிக் டன்களுக்கு மேல், அதாவது உலக நெல் வர்த்தகத்தில் 40 சதவீத பங்களிப்புடன் முக்கிய இடத்தை பெற்றுள்ளது.
சீனாவில் ஒரு ஹெக்டேரில் 7 டன் நெல் அறுவடை செய்யப்படுகிறது. ஆனால், இந்தியாவில் இது 4.2 டன்னாக மட்டுமே உள்ளது. இதனால், இந்திய நெல் விவசாயிகளுக்கு, நோய் தடுப்பு திரவங்கள் அவசியம் தேவை என்பதை உணர்ந்ததால், பல்வேறு ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்த இரண்டு ரசாயன திரவங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன என்கிறது பிஏஎஸ்எப்.
தமிழகத்தில் உற்பத்தி குறைந்தது: தமிழகத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 18 லட்சம் ஏக்கரிலும், காவிரி டெல்டா அல்லாத மாவட்டங்களில் சுமார் 34 லட்சம் ஏக்கரிலும் நெல் பயிரிடப்படுகிறது.2023-24 காலாண்டில், தமிழ்நாட்டின் நெல் விளைச்சல், தேசிய சராசரியை விட (2.74 டன்/ஹெக்டேர்) குறைவாக, 2.31 டன்/ஹெக்டேர் ஆக பதிவாகியுள்ளது.இதற்கு பல்வேறு காரணிகளை விவசாயத் துறை தெரிவித்துள்ளது. 2024 – ம் ஆண்டில், காவிரி டெல்டா பகுதியில் நீர் பற்றாக்குறை காரணமாக சாம்பா பயிரின் விளைச்சல் 40% குறைந்தது குறிப்பிடத்தக்கது.
– ஹைதராபாத்தில் இருந்து எஸ்.அருள்மொழிச் செல்வன்