கே.கே.நகரில் விதிகளை மீறி செயல்பட்டு வந்த பிரபல வணிக வளாகத்துக்கு மாநகராட்சி அதிகாரிகள் நேற்று சீல் வைத்தனர்.
சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டலம், 136-வது வார்டுக்கு உட்பட்ட கே.கே.நகர் அண்ணா பிரதான சாலையில் பிரபல வணிக வளாகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் கட்டுவதற்காக மாநகராட்சி வழங்கிய அனுமதியில், இதன் தரை தளத்தை வாகன நிறுத்தமாக பயன்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தது. ஆனால் அங்கு கடை நடத்தி வந்ததை மாநகராட்சி நிர்வாகம் கண்டறிந்தது. அதைத் தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபட்டதாக மாநகராட்சி சார்பில் அந்த கட்டிடத்தின் உரிமையாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
அதன் மீது பல்வேறு மேல்முறையீடுகள் செய்யப்பட்டன. நீதிமன்ற வழக்கும் தொடரப்பட்டது. பின்னர், இறுதியாக மாநகராட்சிக்கு ஆதரவாக தீர்ப்பு வந்த நிலையில், சென்னை மாநகராட்சி கோடம்பாக்கம் மண்டல செயற் பொறியாளர் இனியன் தலைமையிலான அதிகாரிகள் நேற்று காலை, விதிமீறல் கட்டிடத்துக்கு சீல் வைத்தனர்.