மதுரையில் நேற்று மாலை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினை சாலையின் இருபுறமும் மக்கள் திரண்டு உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மதுரையில் இன்று காலை நடைபெறும் திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கட்சித் தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் நேற்று மதுரை வந்தார். மாலை 5.30 மணியளவில் பெருங்குடி பெரியார் சிலை அருகில் ரோடு ஷோவை தொடங்கினார். வில்லாபுரம், சோலையழகுபுரம், ஜீவா நகர், டிவிஎஸ் பாலம், பழங்காநத்தம் ரவுண்டானா, பைபாஸ் சாலை, காளவாசல், குரு தியேட்டர், திண்டுக்கல் ரோடு சந்திப்பு, ஆரப்பாளையம் வரை 22 கி.மீ. தொலைவுக்கு ‘ரோடு ஷோ’ நடந்தது.
முதலில் வேனில் அமர்ந்தபடி ரோடு ஷோவை தொடங்கிய முதல்வர், பின்னர் வேனிலிருந்து இறங்கி சாலையில் நடக்கத் தொடங்கினார். முதல்வரை பார்க்க சாலையின் இருபுறமும் திமுக கொடிகள், குடைகள், பலூன்கள் மற்றும் முதல்வர், உதயநிதி படங்கள் கொண்ட பதாகைகளைப் பிடித்தபடி ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் கட்சியினர் நின்றிருந்தனர்.
வழிநெடுகிலும் முதல்வரிடம் பொதுமக்கள் மனுக்களையும், புத்தகங்களையும், சால்வைகளையும் வழங்கினர். தன்னைப் பார்க்க வந்த சிறுவர், சிறுமிகளை அழைத்து, அவர்கள் முதல்வர் புகைப்படம் எடுத்துக் கொண்டார். வழிநெடுகிலும் கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம் என மதுரை நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது.
வழியில், ஜெய்ஹிந்த்புரத்தில் வீர மகாளியம்மன் கோயில் அருகே நிரந்தர நிழற்பந்தலை திறந்து வைத்த முதல்வர், ஆரப்பாளையத்தில் மதுரையின் முதல் மேயர் முத்துவின் வெண்கலச் சிலையையும் திறந்து வைத்தார். அமைச்சர்கள் பி.மூர்த்தி, பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோர் உடன் சென்றனர்.
48 ஆண்டுகளுக்குப் பிறகு… மதுரையில் 48 ஆண்டுகளுக்குப் பின்னர் திமுக பொதுக்குழுக் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது. இதற்காக, உத்தங்குடியில் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயம் போன்ற முகப்புடன் கூடிய பிரம்மாண்ட அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது.
அரங்கின் முன்பு 100 அடி உயர கொடிக்கம்பம், அண்ணா, கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலின், உதயநிதி ஆகியோரது கட்அவுட்கள் அமைக்கப்பட்டுள்ளன. பிரம்மாண்ட டிஜிட்டல் திரைகளுடன் மேடை, 8 ஆயிரம் பேர் அமரும் வகையில் குளிரூட்டப்பட்ட அரங்கம், மலர் அலங்காரத்துடன் வரவேற்புக் கூடாரம் உள்ளிட்டவை அமைக்கப்பட்டுள்ளன.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன் மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்எல்ஏ-க்கள், மாநில நிர்வாகிகள், தமிழகம், கர்நாடகா, கேரளா, ஆந்திரா, புதுச்சேரியை சேர்ந்த 4,500 பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் 3 ஆயிரம் சிறப்பு அழைப்பாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கு வருபவர்களுக்கு சைவ, அசைவ உணவு வழங்குவதற்காக ஒரே நேரத்தில் 3 ஆயிரம் பேர் அமர்ந்து சாப்பிடும் வகையில் தனி அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுக்குழுவுக்கான ஏற்பாடுகளையும் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையிலான கட்சியினர் செய்துள்ளனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், மதுரையில் நடைபெறும் பொதுக்குழுக் கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. மத்திய அரசுக்கு எதிராகவும், தமிழக அரசின் 4 ஆண்டுகால சாதனைகளைப் பாராட்டியும், மாநில சுயாட்சி உள்ளிட்ட பல்வேறு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானங்கள் பொதுக்குழுவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், திமுக பொதுக்குழு 2026-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தின் தொடக்கமாக அமையும் என்று கட்சியினர் தெரிவித்துள்ளனர்.