11 RCB fans died: 2025 ஐபிஎல் இறுதி போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வென்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது. இதனால் 18 வருட காத்திருப்பு முடிந்து விட்டதாக ஆர்சிபி அணி ரசிகர்கள் வெடி வெடித்து கொண்டட்டத்தில் ஈடுப்பட்டனர். அதேபோல் இதுவரை ஈ சாலா கப் நம்தே என கூறி வந்தவர்கள், தற்போது ஈ சாலா கப் நம்து என கூறி தங்களது உற்சாகத்தை வெளிபடுத்து வந்தனர்.
இச்சூழலில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றியை கொண்டாடும் விதமாக பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் வெற்றி விழா நிகழ்ச்சியை கர்நாடக அரசு மற்றும் கர்நாடக கிரிக்கெட் வாரியம் ஏற்பாடு செய்திருந்தது. அதே நேரத்தில் ஊர்வலம் நடத்தப்போவதாகவும் கூறப்பட்டிருந்தது. ஆனால் பெங்களூருவின் போக்குவரத்து நெரிசலை கருத்தி கொண்டு அந்த பேரணியை போலீசார் ரத்து செய்வதாக அறிவித்தனர்.
ஆனால் இன்று மதியம், மாலை 5 மணிக்கு ஊர்வலம் நடப்பதாக ஆர்சிபி அணி நிர்வாகம் சமூக வலைத்தளங்களில் அறிவித்தது. ஒருபக்கம் போலீசார் ரத்து செய்ததாக அறிவித்தது மறுபக்கம் ஊர்வலம் என ஆர்சிபி நிர்வாகம் அறிவித்தது. இதனால் ரசிகர்களின் கூட்டம் மேலும் அதிகரித்தது. எக்குத்தப்பான கூட்டம் இருந்ததால், சின்னசாமி மைதானம் அருகே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
27க்கும் மேற்பட்டோர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த உயிரிழப்புகளுக்கு சரியான திட்டமிடல் இல்லாததே காரணம் என்றும் ஆர்சிபி நிர்வாகம் மற்றும் கர்நாடக அரசு இதற்கு பொறுப்பேற்றுக் கொள்ள வேண்டும் என்றும் எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகிறது. இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார் கர்நாடக மக்கள் மற்றும் பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கூறி உள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக துணை முதலமைச்சர் டிகே சிவக்குமார், ரசிகர்களின் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. பேரணி நடத்த திட்டமிட்டோம், ஆனால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியவில்லை. கர்நாடக மற்றும் பெங்களூரு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நிலவரம் குறித்து பெங்களூரு கமிஷனரிடம் கேட்டறிந்தேன். மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களை பார்க்க இருக்கிறேன். காவல்துறை மீது நான் பழி போட விரும்பவில்லை. காவல்துறை ஏற்பாடுகளை செய்து இருந்தது. எதிர்பார்த்தைவிட கூட்டம் அதிகமாக இருந்தது என கூறினார்.
மேலும் படிங்க: ஆர்சிபி வெற்றி பேரணி.. 11 பேரின் உயிர் பறிபோனதற்கு இதுதான் காரணமா? என்ன நடந்தது?
மேலும் படிங்க; ஆர்சிபி வெற்றி பேரணி.. கூட்ட நெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு?