இந்தியாவின் சுபான்ஷு சுக்லா பயணிக்கும் ‘ஆக்சியம்-4’ விண்வெளித் திட்டம் ஒருநாள் தள்ளிவைப்பு

புதுடெல்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, மோசமான வானிலை காரணமாக ஒருநாள் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து இஸ்ரோ தனது அதிகாரபூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், “மோசமான வானிலை காரணமாக, ஆக்சியம்-4 விண்வெளி ஓடம், விண்வெளி நிலையத்துக்கு புறப்படுவது, ஜூன் 10-ம் தேதியில் இருந்து ஜூன் 11-ம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இந்த விண்வெளி ஓடம் ஜூன் 11-ம் தேதி, இந்திய நேரப்படி மாலை 5.30 மணிக்கு புறப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ககன்யான் என்ற திட்டத்தை 2026-ம் ஆண்டு செயல்படுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பி அவர்களை மீண்டும் பத்திரமாக பூமிக்கு அழைத்து வருவதுதான் இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்காவின் நாசா, ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் ஆக்சியம் ஸ்பேஸ் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து ஆக்சியம்-4 விண்வெளி ஓடத்தை சர்வதேச விண்வெளி மையத்துக்கு அனுப்ப திட்டமிடப்பட்டது.

இதன்படி, அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து ஆக்சியம்-4 விண்கலம் ஸ்பெஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் ராக்கெட் மூலம் ஏவப்பட உள்ளது. ஆக்சியம் மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன ஊழியர்கள் இதற்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்துள்ளதாக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஆக்சியம் நிறுவனத்தின் 4-வது விண்கலம் ஆகும். இதில் இந்திய விண்வெளி வீரர் ஒருவர் பயணிக்க இருப்பது இதுதான் முதல் முறை.

இந்த விண்வெளி ஓடத்தில் அமெரிக்கா, இந்தியா, போலந்து மற்றும் ஹங்கேரி நாடுகளைச் சேர்ந்த தலா ஒருவர் என 4 பேர் பயணிக்க உள்ளனர். நாசாவின் முன்னாள் விண்வெளி வீரரும், ஆக்சியம் ஸ்பேஸ் நிறுவனத்தின் இயக்குநருமான (ஹூயூமன் ஸ்பேஸ்பிளைட்) பெக்கி விட்சன் இந்த திட்டத்தை வழிநடத்துகிறார்.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்தின் (இஸ்ரோ) வீரர் சுபான்ஷு சுக்லா (39) விமானியாக செயல்படவுள்ளார். இந்த விண்வெளி ஓடம் 28 மணி நேர பயணத்துக்குப் பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தை சென்றடையும் என நாசா தெரிவித்துள்ளது. இவர்கள் அங்கு 14 நாட்கள் தங்கி இருப்பார்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக, கடந்த 1984-ம் ஆண்டு சர்வதேச விண்வெளி மையத்துக்கு சென்ற ரஷ்யாவின் சோயுஸ் விண்கலத்தில் இந்தியரான ராகேஷ் சர்மா பயணித்தார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்ற முதல் இந்தியர் என்ற பெருமை இவருக்கு கிடைத்தது. 41 ஆண்டுகளுக்குப் பிறகு விண்வெளி நிலையம் செல்லும் இந்தியர் என்ற சாதனையை சுபான்ஷு சுக்லா படைக்க உள்ளார்.

உத்தர பிரதேச மாநிலம் லக்னோவை சேர்ந்தவர் சுபான்ஷு சுக்லா, புனேவில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்வி நிறுவனத்தில் (என்டிஏ) படித்தவர். கடந்த 2006-ம் ஆண்டு இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் சேர்ந்தார். 2024-ம் ஆண்டில் குழு கேப்டனாக பொறுப்பேற்றார். இவர், சுகோய்-30, எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாகுவார், ஹாக், டார்னியர் உள்ளிட்ட பல்வேறு வகையான விமானங்களை சுமார் 2 ஆயிரம் மணி நேரம் ஓட்டி உள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு இஸ்ரோவின் ககன்யான் திட்டத்துக்காக சுபான்ஷு தேர்வு செய்யப்பட்டார். இதற்காக ரஷ்யாவில் உள்ள யூரி காகரின் விண்வெளி மையத்தில் சேர்ந்து சிறப்பு பயிற்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.