கீவ்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 202வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியாவும், உக்ரைனும் நேரடி பேச்சுவார்த்தை நடத்தின. ஆனால், அந்த பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால் போர் நீடித்து வருகிறது.
இதனிடையே, கடந்த 1ம் தேதி ரஷியா மீது உக்ரைன் மிகப்பெரிய அளவில் டிரோன் தாக்குதல் நடத்தியது. இந்த டிரோன் தாக்குதலில் ரஷிய படைத்தளங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 41 போர் விமானங்கள் முற்றிலும் அழிக்கப்பட்டன. இந்த தாக்குதலுக்கு பதிலடியாக உக்ரைன் மீது ரஷியா அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் மீது ரஷியா இன்று அதிகாலை டிரோன் தாக்குதல் நடத்தியது. டிரோன்கள், ஏவுகணைகள் மூலம் உக்ரைனின் கீவ் மற்றும் ஒடேசா நகரக்களை குறிவைத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும், 13 படுகாயமடைந்தனர்.