இஸ்லாமாபாத்: பஹல்காம் தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தான் மீது இந்தியா தீவிர தாக்குதல் நடத்தியது. இந்தநிலையில், ராணுவத்தை வலுப்படுத்த ஏதுவாக அதற்கான பட்ஜெட்டை பாகிஸ்தான் 20 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக நடப்பு நிதியாண்டின் முதல் ஒன்பது மாதங்களில் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த கடன் 270 பில்லியன் டாலர் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஆனால், ஒட்டுமொத்த செலவினம் 7 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் நிதியமைச்சர் முகமது அவுரங்கசீப் கூறுகையில், “ கடந்த 2023-ம் ஆண்டிலேயே கடனை திருப்பிச் செலுத்த தவறும் அபாயத்தை பாகிஸ்தான் கொண்டிருந்தது. ஆனால், தற்போது வளர்ச்சி நிலைநிறுத்தப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் பாகிஸ்தான் பொருளாதார வளர்ச்சி 4.2 சதவீதம் அதிகரிக்கும். அதேசமயம் பணவீக்கம் 7..5 சதவீதமாக இருக்கும்” என்றார்.
வரும் புதிய நிதியாண்டுக்கான (2025 ஜூலை -26 ஜூன்)பட்ஜெட்டில் பாதுகாப்புக்கு ஒதுக்கப்பட்ட தொகை 2.12 டிரில்லியன் பாகிஸ்தான் ரூபாயிலிருந்து 2.55 டிரில்லியன் ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதில், ராணுவ ஓய்வூதியங்களுக்கான 742 பில்லியன் ரூபாய் இடம்பெறவில்லை. இதையும் சேர்க்கும்பட்சத்தில் பாதுகாப்புகான ஒதுக்கீடு என்பது 3.292 டிரில்லியன் ரூபாயை தாண்டும். பொருளாதார துறையில் இந்தியாவை விஞ்சவேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்துள்ளார்.