ஆர்ப்பரிப்பு…பேரானந்தம்… பெருங்கொண்டாட்டம் என உலக தமிழ் ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கிறது ‘முத்த மழை’ பாடல்.
சின்மயி – `தீ’யின் தித்திக்கும் குரலில் தேன் மழையாய் பொழிந்து இதயத்தை இனிக்கவைத்த, அந்தப் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் பாடலாசிரியர் சிவ ஆனந்த். ‘முத்த மழை’ பாடல் மட்டுமல்லாமல் ‘சுகர் பேபி’, ‘எங்கேயோ’ என ‘தக் லைஃப்’ படத்தில் மூன்று பாடல்களை எழுதி பாராட்டு மழையில் நனைந்துகொண்டிருக்கிறார்.
த்ரிஷாவின் பர்சனல் ஃபேவரைட்!
ஒரு பாடலில் பொதுவாக ஒரு சில வரிகளைத்தான் அதீதமாக விரும்பிக் கேட்போம். அதுதான், நம் மூளைக்குள் ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கும். ஆனால், ‘முத்த மழை’ பாடலில் ‘முத்த மழை இங்கு கொட்டித் தீராதோ’…என ஆரம்பித்து ‘இன்னும் வரும் எந்தன் கதை…’ என இறுதிவரை ஒவ்வொரு வரிகளும் மீண்டும் மீண்டும் மனதில் இசைத்துக்கொண்டே இருக்கின்றன. ‘தக் லைஃப்’ படத்தில், தனது பர்சனல் ஃபேவரைட்டாக ‘முத்த மழை’ பாடலைத்தான் த்ரிஷா குறிப்பிட்டிருந்தார்.
‘இதை விட அற்புதமாய் எழுத முடியுமா? கிறங்கிப் போனேன். தமிழில் என்ன ஒரு வார்த்தை ஜாலங்கள். எத்தனை காலம் ஆயிற்று? இப்படி ஒரு மொழியின் ஆளுமை கண்டு’ என இயக்குநர் செல்வராகவனும் பாடலாசிரியர் சிவ ஆனந்தை மெய்சிலிர்த்து பாராட்டியுள்ளார்.
இப்படி, ரசிகர்கள் மட்டுமல்லாமல் திரைத்துறையினரும் கொண்டாடித் தீர்க்கிறார்கள். இந்த நிலையில், உதவி இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், ‘மெட்ராஸ் டாக்கீஸ்’ நிர்வாக தயாரிப்பாளர் என பல முகங்களைக் கொண்டிருந்தாலும் பாடலாசிரியராக அழுத்தமாக பதிந்திருக்கும் சிவ ஆனந்திடம் வாழ்த்துகளுடனும் பாராட்டுகளுடனும் பேசினேன்.
“முத்த மழை பாட்டு ஹிட் ஆகும்னு தெரியும். ஆனா, இவ்ளோ பெரிய வரவேற்பை குவிக்கும்னு எதிர்பார்க்கல. எல்லா புகழும் ஏ.ஆர் ரஹ்மான் சாருக்குத்தான். அற்புதமாக ட்யூன்களைப் போட்டுள்ளார். தமிழ்ல எத்தனையோ நல்ல பாடல்களை, பல வருடங்களுக்கு நாம ஞாபகம் வெச்சிருப்போம். அந்த மாதிரி பாடல்கள் தமிழ்ல வரணும்னு நான் நினைச்சதுண்டு. இப்போ, என்னோட பாட்டையே, அந்த லிஸ்ட்டுல சேர்த்து கொண்டாடுறது மன நிறைவா இருக்கு.
எல்லோரும் பாராட்டுறது சந்தோஷத்தைக் கொடுக்குது. ஆனா, எப்போதும் என்னை பாடலாசிரியராகவே கருதினது கிடையாது. பாடல் எழுத வாய்ப்புக் கொடுத்த மணிரத்னம் சாருக்கும் ரஹ்மான் சாருக்கும் நன்றி!” – தன்னடக்கத்துடனும் உற்சாகப்பூரிப்புடனும் நிதானமாக பேசும் சிவ ஆனந்திடம் பல்வேறு கேள்விகளை முன்வைத்தேன்.
“முத்த மழை, சுகர் பேபி, எங்கேயோ…. மூன்று பாடல்களுமே தலைவனை நினைத்து தலைவி ஏங்கித்தவிக்கும் பாடல்களா உங்களுக்கு அமைந்தது எப்படி?”
“கமல் சாரும் கார்த்திக் நேத்தாவும் ‘ஜிங்குச்சா’, ‘விண்வெளி நாயகா’, ‘அஞ்சு வண்ணப்பூவே’-ன்னு அற்புதமான பாடல்களை கொடுத்திருக்காங்க. ‘தக் லைஃப்’ படத்துல ஒரு பெண்ணோட பெருங்காதலை பிரதிபலிக்கிற மூன்று பாடல்கள் எனக்கு கிடைச்சதை லக்கியா நினைக்கிறேன்.
‘பொன்னியின் செல்வன்’ படத்து ‘அலைகடல் ஆழம்’ பாடலும் பெண்ணோட மனநிலையை பிரதிபலிக்கிற மாதிரிதான் எழுதியிருந்தேன். அந்தப் பாட்டோட வரிகள் மணி சார், ரஹ்மான் சாருக்கு ரொம்பவே பிடிச்சிருந்தது. அதனாலதான், ‘தக் லைஃப்’ல மூன்று பாடல்களையும் என்னை எழுதவெச்சாங்கன்னு நினைக்கிறேன்.
பெண்களின் பெருங்காதலை, பேரன்பை, உள்ளார்ந்த மனநிலையை, ஏக்கத்தை வெளிப்படுத்தும் பாடல்களை கண்ணதாசன் எழுதியிருக்கார். பாரதியாரும் ‘கண்ணன் என் காதலன்’ தொகுப்பிலும் அழகா;ஆழமாக பதிவு செய்திருக்கார். அந்த வரிசையில், ‘முத்த மழை’ பாடல் 1960-களில் வெளியான கண்ணதாசன் பாடல்கள் மாதிரி இருக்கணும்னு நினைச்சேன்.
அதாவது, ‘கர்ணன்’ படத்தோட ‘என் உயிர் தோழி கேள் ஒரு செய்தி’ பாடல் மாதிரி பழந்தமிழ்ல எழுதினேன். அதனால, இந்த மூன்று பாடல்களும் தமிழ் ரசிகர்களுக்கு புதுசு கிடையாது. மேலும், என் பாட்டி, அம்மா, சித்தின்னு நான் பெண்களாலேயே வளர்க்கப்பட்டவன்; வளர்த்தெடுக்கப்பட்டவன். எனக்கு பெண் தோழிகள் அதிகம். பெண்களின் ஆழ்மன ஏக்கத்தை அப்படியே பிரதிபலிச்சிருக்கேன்னு சொல்றதுக்கு காரணம் இதுவாக்கூட இருக்கலாம்.”
“பாடல்களுக்கு மணிரத்னம் – ஏ.ஆர் ரஹ்மான் ரியாக்ஷன்? மறக்க முடியாத மெமரீஸ்?”
“மூன்று பாடல்களுமே ஸ்பெஷல் மெமரீஸ்தான். குறிப்பா, ‘முத்த மழை’ பாட்டோட ட்யூனை ரஹ்மான் சார் அனுப்பினப்பவே, நிச்சயமா இந்தப் பாட்டு ரொம்ப ஸ்பெஷலா கொண்டாடப்படும்னு தோணுச்சு. ட்யூனைக் கேட்டுட்டு முதல் வெர்ஷன் எழுதி முடிச்சதும் மணி சார், ரஹ்மான் சார் குட்டி குட்டி கரெக்ஷன் சொன்னாங்க. பாட்டோட ட்யூன் ரொம்பவே எமோஷனலா இருந்தது. அதனால, பாடல் வரிகளில் அதிகமா சோகத்தை தோய்ச்சு எழுதியிருந்தேன். ஆனா, ரஹ்மான் சார் இன்னும் கொஞ்சம் எளிமையாக்கச் சொன்னார். ‘முத்த மழை’ பாட்டுக்கு இன்னும் ரெண்டு வெர்ஷன் எழுதினேன். நானும் மணி சாரும் கார்ல, ஃப்ளைட்ல போகும்போதெல்லாம் ‘முத்த மழை’ பாட்டுப் பற்றி நிறைய டிஸ்கஸ் பண்ணினோம்.
கடைசியில், முதல் வெர்ஷனைத்தான் ரஹ்மான் சார் பயன்படுத்தினார். ‘முத்த மழை’ பாட்டுல ஒரு கவாலி டச்சும் இருக்கு. கவாலி ஸ்டைல்ல தமிழ்ல பாட்டு வந்து ரொம்ப நாளாச்சு. ட்யூனை முதல் தடவை கேட்டப்போ, கவாலி ஸ்டைல்ல வரும், இவ்ளோ கோரஸ், இங்க ஆண் குரல், அங்க பெண் குரல்கள் வரும்னெல்லாம் தெரியாது. அந்தப் பாட்டு இவ்ளோ பெரிய ஹிட் ஆகிருக்குன்னா, எல்லாத்துக்கும் ரஹ்மான் சாரோட மேஜிக்தான் காரணம்.
ரெண்டாவதா, ‘சுகர் பேபி’ ப்யூர் ரஹ்மான் சார் மேஜிக். அது, வெறும் காதல் பாட்டு கிடையாது. மணி சார் விருப்பத்துக்கேற்றப்படி, வன்முறையையும் கொட்டி வரிகள் அமைச்சேன். மூன்றாவதா, ‘எங்கேயோ’ பாட்டோட ட்யூன் கைல இருந்ததால கேட்டவுடனே எழுதிக்கொடுத்துட்டேன். ‘தக் லைஃப்’ ஆல்பம் முழுமையானது. ‘காதலிக்க நேரமில்லை’, ‘நினைவெல்லாம் நித்யா’, ‘திருடா திருடி’ மாதிரி எல்லா பாடல்களையுமே சூப்பர்னுதான் சொல்லணும். ஒவ்வொரு பாட்டும் ஒவ்வொரு விதத்துல அழகு.

மணி சார்க்கு பாட்டு வரிகள் பிடிச்சிருந்தா, உடனே ரெக்கார்ட் போயிடலாம்னு சொல்வார். அப்படித்தான், எல்லா பாடல்களையும் ரெக்கார்ட் பண்ணோம். பாடலுக்கு ரியாக்ஷன் எதுவும் இல்லன்னா நல்லாருக்குன்னு அர்த்தம். அவருக்கு ‘எங்கேயோ’ பாட்டு ரொம்ப பிடிச்சிருந்திருக்கு. ‘நான் இன்னைக்கு கார்ல வரும்போது கேட்டுட்டு வந்தேன். ரொம்ப நல்லாருக்கு. வரிகளும் சூப்பர்-ன்னார். ‘முத்த மழை’ பாட்டுல ‘சூரியன் தாரகை மண்ணில் விழாதோ’ வரிகளைக் கேட்டுட்டு கவிஞன் ஆகிட்டன்னு பாராட்டினார்.
ரஹ்மான் சாருக்கு ‘முத்த மழை’ ரொம்ப பிடிச்சிருந்தது. ‘கரு மை கொண்ட கண்நோக்கி பொய் பேசி நின்றாயா… போதும் போதும் என சென்றாயா’ வரிகளை படிச்சுட்டு ‘ஆஹ்.. வெரி நைஸ்’னு ரொம்பவே பாராட்டினார். அவரோட ட்யூனுக்கும் சந்தத்துக்கும் வரிகள் நறுக்குன்னு அமைஞ்சுடுச்சு.”
“முத்த மழை சின்மயி – தீ உங்களோட ஃபேவரைட் வெர்ஷன்?”
“முத்த மழை பாட்டுக்கு ரெண்டு வெர்ஷன் கிடைச்சது ரொம்ப சந்தோஷம். சின்மயி – தீ ரெண்டு பேருமே ரொம்ப திறமையான பாடகிகள். ரெண்டு பேரோட வெர்ஷனையும் மாத்தி மாத்திக் கேட்டுட்டிருக்கேன். ரெண்டும் வெவ்வேற மாதிரி எமோஷன்ஸ். வெரி பிரில்லியண்ட். பாடலை என்னோட வரிகளா கேக்காம, உங்களை மாதிரி ரசிகராத்தான் நானும் கேட்டு புலங்காகிதம் அடைஞ்சிட்டிருக்கேன்.
.மற்றபடி, பாடகி தீயோட ரெக்கார்டிங் கிரேட். வெரி ஃபன். யுனிக் ஸ்டைல்ல பாடினாங்க. முதல் தடவை கேட்டப்பவே ரொம்ப பிடிச்சிடுச்சு. சின்மயி குரல் தெலுங்கு, இந்தி வெர்ஷன்ல பாடினாங்க. தமிழ்ல பாடினப்போ வேற ஒரு ஃபீலை கொடுத்துச்சு. சின்மயியோடது கிளாசிக்கல் ஸ்டைல்ல அழகா, ரொமான்டிக்கா புது விதமா இருந்துச்சு.
“வானம் கொட்டட்டும் தான் உங்களோட முதல் படம். உங்களுக்குள்ள இருக்கிற கவிஞரை கண்டுபிடிச்சது யாரு?”
“நான் ஒரு தமிழ் பைத்தியம். அந்தப் படத்தோட இயக்குநர் தனா என்னோட நண்பர். இசையமைப்பாளர் சித் ஶ்ரீராமும் நானும் பேசி டம்மி வெர்ஷன் பேசி எழுதினோம். எல்லாமே நல்லா வந்ததால என்னையே எழுத வெச்சுட்டாங்க.”
“இந்தப் படத்துல கமல்ஹாசன் ஏன் பாடல?”
“அவர் நாயகனில் ஆடல. அதனால, இந்தப் படத்துல பாடலன்னு நினைக்கிறேன்.”
“முத்த மழை கேட்டுட்டு சுஹாசினியோட பாராட்டு என்ன? உங்க வீட்ல என்ன சொன்னாங்க?”
“இன்னும் அவங்கக்கிட்டே இதுபற்றி பேசல. ‘பொன்னியின் செல்வன்’ வந்தப்போ ‘அலைகடல் ஆழம்’ பாட்டைக் கேட்டுட்டு ரொம்பவே பாராட்டினாங்க. என்னோட மனைவிக்கு தமிழ் தெரியாது. ஆனா, அவங்களுக்கு ‘முத்த மழை’தான் ஃபேவரைட். ‘பொல்லா இரவோ சொல்லா உறவோ வரிகளை ரொம்பவே ரசிச்சுப் பாராட்டினாங்க”
“படத்துக்கும் உங்களுக்கும் ‘முத்த மழை’ பாட்டு பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்குன்னு சொல்லலாமா? படத்துல உங்க ஃபேவரைட் பாடல் எது?”
“இப்படி சொல்றது ரொம்ப சந்தோஷம்தான். ஆனா, எல்லா பாட்டுமேதான் படத்துக்கு அடையாளமா மாறியிருக்கு. ‘முத்த மழை’ பாட்டு கேட்டுட்டு த்ரிஷா மேடைல மட்டுமில்ல என்கிட்டேயும் பர்சனலா ரொம்ப பிடிச்சிருக்குன்னு சொன்னாங்க. என்னோட மூணு பாட்டுமே பிடிக்கும்னாலும், ‘அஞ்சு வண்ணப் பூவே’ தான் என்னோட ஃபேவரைட்.”