அகமதாபாத்: அகமதாபாத்தில் நடந்த 241 உயிர்களை இழந்த பயங்கரமான விமான விபத்தில் பல குடும்பங்களின் கனவுகள் கலைந்து போயுள்ளன. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று முன்தினம் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். இதில் பயணம் செய்தவர்களின் கனவுகள் கலைந்து அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் மீள முடியாத சோகத்துக்குச் சென்றுள்ளனர். விபத்தில் ராஜஸ்தானைச் சேர்ந்த 10 பேர் இறந்தனர். அதில் 5 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்று தெரியவந்துள்ளது.
தொழில் ரீதியாக லண்டனுக்கு குடியேற சென்ற மருத்துவர்களின் குடும்பம் இந்த விபத்தில் உயிரிழந்துள்ளது பலருக்கு கண்ணீரை வரவழைத்துள்ளது. டாக்டர் பிரதீக் ஜோஷி, அவரது மனைவி டாக்டர் கோனி வியாஸ் ஆகியோர் தங்கள் 3 குழந்தைகளான மிராயா, நகுல், பிரத்யுத் ஆகியோருடன் புதிய வாழ்க்கையைத் தொடங்குவதற்காக லண்டனுக்குப் பயணம் செய்தனர். இதில் பிரத்யுத்தும், நகுலும் 5 வயதேயான இரட்டையர்கள். மிராயாவுக்கு 8 வயதாகிறது.
அவர்கள் தொழில்முறை முன்னேற்றத்துக்காகவும், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் இந்த முடிவை எடுத்திருந்தனர். ஆனால் நடந்து முடிந்த கோர விபத்தில் டாக்டர் பிரதீக் ஜோஷி குடும்பத்தார் அனைவரும் இறந்தது பலரை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. விமானம் புறப்படுவதற்கு முன்பு கோனி வியாஸ், பிரதீக் தங்களது குழந்தைகளுடன் செல்பி எடுத்துக்கொண்டு அதை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளனர். ஆனால், அதுவே அவர்களது கடைசி புகைப்படமாகி விட்டது.
சிகிச்சைக்காக வந்தவர்: லண்டனைச் சேர்ந்த ரூபல் பென் படேல், தனது கணவர், 3 குழந்தைகளுடன் லண்டனில் வசித்து வந்தார். இந்நிலையில் அவர் தனது மருத்துவ சிகிச்சைக்காக குஜராத்துக்கு வந்து அவரது உறவினர் வீட்டில் தங்கியிருந்தார். சிகிச்சை முடிந்த நிலையில் அவர், லண்டன் விமானத்தில் புறப்பட்டார். ஆனால், துரதிருஷ்டவசமாக விபத்தில் சிக்கி இறந்தார். அவரை வழியனுப்ப ரூபல் பென்னின் அண்ணன், அண்ணி ஆகியோர் அகமதாபாத் வந்திருந்தனர். வழியனுப்பி விட்டு அவர்கள் ஊருக்குத் திரும்பிய பின்னர்தான் தனது தங்கை ரூபல் பென் இறந்த செய்தி அவருக்கு தெரிந்துள்ளது.
மகளைக் காணச் சென்றவர்: இதேபோல வதோதராவைச் சேர்ந்த அஞ்சு சர்மாவும் விபத்தில் இறந்தார். இவர் லண்டனில் உள்ள மூத்த மகளைக் காண லண்டனுக்கு, போயிங் 787 விமானத்தில் பயணித்து இறந்தார். அஞ்சு சர்மா இறந்துள்ளதால் அந்த கிராமமே சோகத்தில் மூழ்கியுள்ளது. அவர் இறந்த தகவல், அஞ்சுவின் வயதான பெற்றோருக்கு இன்னும் தெரிவிக்கப்படவில்லை. அஞ்சுவின் தந்தை ஜெகதீஷ் சர்மா, முன்னாள் ராணுவ வீரர். மூப்பு காரணமாக படுத்த படுக்கையாக உள்ளார். இதேபோல அவரது தாயும் உடல் நலமின்றி உள்ளார்.
இதுகுறித்து அஞ்சுவின் தங்கை நீலு சர்மா கூறும்போது, “விமானத்தில் ஏறிய பின்னர், அஞ்சு சர்மா எனக்கு வீடியோ கால் செய்தார். ஆனால் அப்போது என்னால் போனை எடுக்க முடியவில்லை. அவரை இனி பார்க்கவே முடியாது என்று எண்ணும் போது சோகம் தாங்க முடியவில்லை” என்று கூறிவிட்டு உடைந்து அழுதார்.