புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் பெர்ஹம்பூரில் உள்ள கோபால்பூர் கடற்கரை சுற்றுலா தலமாக விளங்குகிறது. தற்போது, அங்கு நடந்து வரும் உள்ளூர் பண்டிகையையொட்டி அதிகளவில் மக்கள் கடற்கரைக்கு வந்து செல்கிறார்கள்.
இந்தநிலையில், அங்கு தங்கி படித்து வரும் கல்லூரி மாணவி ஒருவரும் தன்னுடன் அதே கல்லூரியில் படிக்கும் தனது காதனுடன் நேற்றுமுன்தினம் இரவு கடற்கரைக்கு சென்றார். இருவரும் தனிமையான இடத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் அங்கு 10 பேர் கும்பல் வந்தனர்.
திடீரென அவர்கள் மாணவியின் காதலனை பிடித்து வைத்துக்கொண்டு, மாணவியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு தூக்கிச்சென்று கற்பழித்துவிட்டு ஓடிவிட்டனர்.
இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மாணவியும், அவரது காதலனும் கோபால்பூர் போலீஸ் நிலையம் சென்று புகார் கொடுத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, இந்த சம்பவத்தில் தொடர்புடைய 7 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவர்கள் யாரும் உள்ளூரைச் சேர்ந்தவர்கள் இல்லை என்பது தெரியவந்தது. மற்ற 3 பேரையும் தேடி வருகின்றனர். கடற்கரைக்கு காதலனுடன் சென்ற கல்லூரி மாணவி 10 பேர் கும்பலால் கற்பழிக்கப்பட்ட சம்பவம் ஒடிசாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஆண்டு மார்ச் மாதம் அம்மாநில உள்துறை வெளியிட்ட குற்றங்கள் குறித்த வெள்ளை அறிக்கையின்படி, 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 2024ம் ஆண்டு ஒடிசாவில் பாலியல் வன்கொடுமை வழக்குகளின் எண்ணிக்கை 8 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.