இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான ஐந்தாவது நாளை எட்டி உள்ளது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 471 ரன்கள் குவித்தது, அதனை தொடர்ந்து இங்கிலாந்து அணியும் முதல் இன்னிங்சில் சிறப்பாக விளையாடிய 465 ரன்கள் குவித்தது. பிறகு இரண்டாவது இன்னிங்சில் விளையாடிய இந்திய அணி தொடக்கத்தில் சில விக்கெட்டுகளை இழந்தாலும், கேஎல் ராகுல் மற்றும் ரிஷப் பந்த் ஜோடி அணியை சரிவிலிருந்து மீட்டது. இவர்கள் இருவரும் சதம் அடிக்க இந்திய அணி 364 ரன்கள் அடித்தது. 371 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற நிலையில் இங்கிலாந்து அணி ஐந்தாவது நாளில் களம் இறங்குகிறது. இதனால் இந்த டெஸ்ட் போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
சிறப்பாக விளையாடிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்
இந்தியாவிற்கு கடந்த சில டெஸ்ட் போட்டிகளாக டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் ரன்கள் அடிக்க மிகவும் சிரமப்பட்டனர். ஆனால் இந்த டெஸ்டில் அனைத்தும் அப்படியே மாறி உள்ளது .டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் ரன்கள் அடிக்க, மிடில் ஆர்டர் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் மிகவும் சொதப்பி வருகின்றனர். முதல் இன்னிங்ஸில் ஜெய்ஸ்வால், கில், ரிஷப் பந்த் ஆகியோர் சதம் அடித்த நிலையில் ஜடேஜா, தாக்கூர், கருண் நாயர் ஆகியோர் ரன்கள் அடிக்க சிரமப்பட்டனர். அதே போல இரண்டாவது இன்னிங்சிலும் இந்திய அணி வலுவான இடத்தில நிலையில் இருந்த நிலையில் மீண்டும் இவர்கள் மூன்று பேரும் ரன்கள் அடிக்க தவறினர். இதன் காரணமாக தற்போது இக்கெட்டான நிலையில் இந்தியா உள்ளது. ஒரே ஓவரில் 3 விக்கெட்களை கொடுத்து போட்டியை அப்படியே மாற்றினர். ஒருவேளை முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் பட்சத்தில் மிடில் மற்றும் லோயர் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் தான் தோல்விக்கு முக்கிய காரணமாக இருப்பார்கள். அதே போல பவுலிங்கிலும் பும்ராவிற்கு உதவும் விதமாக யாருமே வந்து வீசவில்லை.
இரண்டாவது டெஸ்டில் வரும் அதிரடி மாற்றங்கள்?
ஆல்ரவுண்டராக ஷர்துல் தாகூர் எடுக்கப்பட்ட நிலையில் அவருக்கு பெரிதாக ஓவர்கள் கொடுக்கப்படவில்லை, அதே சமயம் பேட்டிங்கிலும் அவரால் ரன்கள் அடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு பதிலாக நிதீஷ் குமார் ரெட்டி அணியில் சேர்க்கப்படலாம். மேலும் பிரசித் கிருஷ்ணா மற்றும் சிராஜ் ஆகியோர் ரன்களை வாரி வழங்கி வருகின்றனர். இதனால் அவர்களுக்கு பதிலாக ஹர்ஸ்தீப் சிங் மற்றும் ஹர்ஷித் ராணா ஆகியோர் இடம் பெற வாய்ப்புள்ளது. பேட்டிங்கிலும் சாய் சுதர்சன் அல்லது கருண் நாயருக்கு பதிலாக அபிமன்யு ஈஸ்வரனுக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். அதே போல கூடுதல் ஸ்பின்னர் ஆக குல்தீப் யாதவை அணியில் எடுக்கலாமா என்ற யோசனைகளையும் இந்திய அணி வைத்துள்ளதாக கூறப்படுகிறது.