‘தாடி கூடாது…’ – காஷ்மீர் மருத்துவருக்கு கோவை தனியார் மருத்துவமனை விதித்த நிபந்தனையால் சர்ச்சை!

புதுடெல்லி: ஸ்ரீநகர் மருத்துவருக்கு கோவை தனியார் மருத்துவமனையில் மதச் சுதந்திர உரிமையை மீறும் வகையிலான நிபந்தனையுடன் பட்டமேற்படிப்பின் பட்டயக் கல்வி அனுமதி மறுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு, காஷ்மீர் மாணவர்கள் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

இது குறித்து, தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு காஷ்மீர் மாணவர்கள் சங்கம் சார்பில் அதன் தேசிய ஒருங்கிணைப்பாளர் நசீர் குவேஹாமி எழுதியக் கடிதத்தில் கூறியிருப்பதாவது: ‘தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் (என்பிஎம்எஸ்) நடத்திய நீட் எஸ்எஸ் இரண்டாவது சுற்று கவுன்சிலிங்கில், டாக்டர் சுபைர் அகமதுவுக்கு கோவை மருத்துவ மையம் மற்றும் மருத்துவமனையில் (கேஎம்சிஎச்), நெப்ராலஜி துறையில் இடம் ஒதுக்கப்பட்டது. அப்போது அந்த மாணவர் வைத்திருந்த தாடியை மழிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாணவரின் சேர்க்கைக்கான அனைத்து முறைகளை முடித்து மருத்துவமனைக்கு வந்த டாக்டர் சுபைரிடம், தாடி மழிப்பதாக கடிதம் அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இது, அவர் ஒரு முஸ்லிம் என்ற முறையில் மாணவர் சுபைரின் மதக் கடமைகளுக்கு முரணானது. இதனால் அக்கடிதம் அளிக்க டாக்டர் சுபைர் மறுத்துள்ளார்.

மேலும், தனது தாடியை அவர் அறுவை சிகிச்சைக்கான முகக்கவசம் மூலம் மறைத்து கொள்வதாக உறுதி கூறியுள்ளார். இத்துடன், அனைத்து சுகாதார நெறிமுறைகள் மற்றும் நிறுவன ஆடைக் குறியீடுகளுக்கு அவர் இணங்க ஒப்புக்கொண்டுள்ளார். எனினும் அவருக்கு கேஎம்சிஎச் நிர்வாகம் இடமளிக்க மறுத்ததாகக் கூறப்படுகிறது. டாக்டர். சுபைர் தனது தாடியை மழிக்க வேண்டும் அல்லது ட்ரிம் செய்ய வேண்டும் என மருத்துவமனை சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையில் படிக்கும் அனுமதிக்கு அவர் தனது தாடியை மழிக்க வேண்டும் என்று திட்டவட்டமாகக் கேட்டுக் கொள்ளப்பட்டார். டாக்டர் சுபைர் தனது எம்பிபிஎஸ், எம்டி மற்றும் சீனியர் ரெசிடென்சியை ஸ்ரீநகரில் உள்ள ஷெர்-இ-காஷ்மீர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தில் (ஸ்கிம்ஸ்) அத்தகைய எந்த தடையும் இல்லாமல் முடித்துள்ளார்.

கேஎம்சிஎச் மருத்துவக் கல்லூரியின் இந்த தாடி கொள்கையை முன்கூட்டியே வெளிப்படையாக அறிவித்திருந்தால், டாக்டர் சுபைர் அந்த நிறுவனத்தைத் தேர்ந்தெடுத்திருக்க மாட்டார். வேறு வழியில்லாமல், அகில இந்திய தகுதி அடிப்படையில் இடத்தைப் பெற்றிருந்தாலும், டாக்டர் சுபைர் அந்தத் திட்டத்திலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

மத சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்யும் இந்திய அரசியலமைப்பின் 25-வது பிரிவின் தெளிவான இந்த மீறலை நம் சங்கம் கண்டிக்கிறது. இதனிடையே, மூன்றாவது சுற்று கவுன்சிலிங்கில் பங்கேற்க அனுமதிக்குமாறும், சேர்க்கைச் செயல்பாட்டின் போது சமர்ப்பிக்கப்பட்ட ரூ.2 லட்சம் பாதுகாப்பு வைப்புத்தொகையைத் திரும்பப் பெறுமாறும் அவர் என்பிஎம்எஸ் இடம் கோரி விட்டார்.

இதுபோன்ற தோற்ற அடிப்படையிலான கட்டுப்பாடுகள் தேவையற்றவை மட்டுமல்ல, பாரபட்சமானவை மற்றும் விலக்கு அளிக்கும் தன்மை கொண்டவை. தம் கொள்கையை கேஎம்சிஎச் முன்கூட்டியே வெளிப்படுத்தாமல் அதை சேர்க்கைக்கு பின் விதிப்பது நியாயமற்றது. இது, அரசியலமைப்பின் உணர்வு மற்றும் எழுத்து இரண்டையும் மீறும் செயல்.

முற்போக்கான மதிப்புகள் மற்றும் உள்ளடக்கிய நிர்வாகத்துக்கு பெயர் பெற்ற தமிழ்நாட்டில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்ததில் சங்கம் குறிப்பாக ஏமாற்றம் அடைந்துள்ளது. காஷ்மீர் பள்ளத்தாக்கு உட்பட இந்தியா முழுவதிலுமிருந்து மாணவர்கள் மற்றும் நிபுணர்களை தமிழ்நாடு நீண்ட காலமாக வரவேற்றுள்ளது. இந்த சம்பவம் அந்த பெருமைமிக்க மரபைக் கெடுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது.

மேலும், சிறுபான்மை பின்னணியைச் சேர்ந்த மாணவர்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையிலான செயல் இது. ஒரு காஷ்மீர் மருத்துவரை அவரது மத அடையாளத்தின் முக்கிய பகுதியாகக் கொண்ட தாடியை மழிக்க கட்டாயப்படுத்துவது அவரது அடிப்படை உரிமைகளை மீறும் செயல். இது மட்டுமல்லாமல், கல்வி இடங்களில் பயம், விலக்கு மற்றும் அந்நியப்படுத்தலையும் வளர்க்கிறது.

தமிழ்நாட்டில் உள்ள கல்வி மற்றும் சுகாதார நிறுவனங்கள் முழுவதும் மத சுதந்திரங்கள் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்ய அவசர நடவடிக்கைகளை எடுக்குமாறு முதல்வர் மு.க. ஸ்டாலினை சங்கம் வலியுறுத்துகிறது. அரசியலமைப்பு உரிமைகளை மீறும் பாரபட்சமான நிறுவனக் கொள்கைகளை கட்டுப்படுத்துவது அவசியம்.

முதல்வரின் தலைமை மற்றும் நீதி, பன்மைத்துவம் மற்றும் சமத்துவத்திற்கான அர்ப்பணிப்பில் நமது சங்கம் நம்பிக்கை வைத்துள்ளது. தமிழ்நாட்டை நம் மாணவர்கள், சகிப்புத்தன்மை மற்றும் நீதியின் கலங்கரை விளக்கமாகப் பார்க்கின்றனர். எனவே, மாணவர்களின் இந்த நம்பிக்கையை மீட்டெடுக்க தமிழக முதல்வரான நீங்கள் தலையீடுமாறு கேட்டுக்கொள்கிறோம்’ என்று அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.