திரைத்துறையில் உலக அளவில் பிரபல விருதாக அறியப்படும் ஆஸ்கர் விருது குழுவில் இணைய தமிழ் நடிகர் `செவாலியே’ கமல்ஹாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது.
இந்த அழைப்பைத்தொடர்ந்து கமல்ஹாசனுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்த நிலையில், ஆஸ்கர் குழுவின் அழைப்பானது தனக்கானது மட்டுமல்ல என்றும், இந்திய சினிமாவுக்கானது என்றும் கமல்ஹாசன் தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து தனது எக்ஸ் தளப் பக்கத்தில் கமல்ஹாசன், “மோஷன் பிக்சர் ஆர்ட்ஸ் அண்ட் சயின்சஸ் அகாடமியில் (Academy of Motion Picture Arts and Sciences) சேருவதில் நான் பெருமைப்படுகிறேன்.
இந்த அங்கீகாரம் எனக்கானது மட்டுமல்ல, இந்திய சினிமாவுக்கும் என்னை உருவாக்கிய எண்ணற்ற கதைசொல்லிகளுக்கானது.
I am honoured to join the Academy of Motion Picture Arts and Sciences.
This recognition is not mine alone, it belongs to the Indian film community and the countless storytellers who shaped me. Indian cinema has so much to offer the world, and I look forward to deepening our… https://t.co/zmw0TYFmPq
— Kamal Haasan (@ikamalhaasan) June 28, 2025
இந்திய சினிமா இவ்வுலகிற்கு நிறைய வழங்கவிருக்கிறது. உலக சினிமாவுடனான நமது ஈடுபாட்டை மேலும் ஆழமாக்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
அகாடமியில் இணைந்த பிற கலைஞர்களுக்கும், தொழில்நுட்ப கலைஞர்களுக்கும் வாழ்த்துகள்.” என்று பதிவிட்டிருக்கிறார்.
ஆஸ்கர் விருது குழுவில் இந்தியாவிலிருந்து இந்தி நடிகர் ஆயுஷ்மன் குராணா, ‘காஸ்டிங்’ இயக்குநர் கரண் மாலி, ஒளிப்பதிவாளர் ரனபீர் தாஸ், ஆடை வடிவமைப்பாளர் மாக்ஸிமா பாசு, ஆவணப்பட இயக்குநர் ஸ்மிருதி முந்த்ரா, இயக்குநர் பாயல் கபாடியா ஆகியோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.