வாஷிங்டன்,
உக்ரைன், ரஷியா இடையேயான போர் இன்று 1 ஆயிரத்து 244வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்கா உள்பட பல்வேறு நாடுகள் முயற்சித்தன. ஆனால் அது தோல்வியில் முடிந்தது. அதேபோல், போர் நிறுத்தம் தொடர்பாக ரஷியா, உக்ரைன் நடத்திய நேரடி பேச்சுவார்த்தையும் தோல்வியடைந்தது. இதனால், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது.
இதனிடையே, போர் தொடங்கியது முதல் ரஷியா மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதார தடைகளை விதித்து வருகிறது. அதேவேளை, ரஷியாவில் இருந்து இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகள் குறைந்த விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகின்றன. ரஷியா கச்சா எண்ணெய் விற்பனையில் கிடைக்கும் பணத்தை கொண்டு உக்ரைன் போரை தொடர்ந்து நடத்தி வருவதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார்.
இந்நிலையில், ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கினால் இந்தியாவின் பொருளாதாரத்தை நசுக்கி விடுவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் மந்திரி சபையில் இடம்பெற்றுள்ள எம்.பி. லிண்ட்சே கிரகாம் மிரட்டல் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அமெரிக்க செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் கிரகாம் கூறியதாவது,
ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கும் சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் 100 சதவீதம் வரி விதிக்க உள்ளார். சீனா, இந்தியா, பிரேசில் போன்ற நாடுகளுக்கு நான் கூறுவது என்னவென்றால் நீங்கள் தொடர்ந்து ரஷியாவிடமிருந்து மலிவு விலையில் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைன் போர் நீடிக்க அனுமதித்தால் உங்கள் பொருளாதாரத்தை நாங்கள் நசுக்கி விடுவோம்’ என்றார்.