இந்தியா உடனான உறவை டிரம்ப் துண்டிக்க இதுதான் காரணம்: அமெரிக்க முன்னாள் பாதுகாப்பு ஆலோசகர் குற்றச்சாட்டு

வாஷிங்டன்,

இந்தியாவில் இருந்து அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 50 சதவீத வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார், இதனால், இந்தியா அமெரிக்கா இடையிலான வர்த்தக உறவில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. டிரம்பின் இந்த முடிவால் இந்தியா தற்போது சீனாவிடம் வர்த்தக உறவை வலுவாக்க தொடங்கியுள்ளது. அதேபோல, ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் வர்த்தக உறவை வலுப்படுத்த வேண்டும் என்று உறுப்பு நாடுகள் மத்தியில் பேசப்பட்டது. இந்தியாவின் இந்த நடவடிக்கையால் அமெரிக்காக்கு சற்று அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. டிரம்பின் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைக்கு அமெரிக்காவிலும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த நிலையில், இந்தியாவுடன் மோதல் போக்கை அதிபர் டிரம்ப் கடைபிடிப்பதற்கு, அவரது தனிப்பட்ட வணிக நலன்களே காரணம் என அமெரிக்காவின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சலிவன் குற்றம்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது: “தொழில்நுட்பம், திறமை, பொருளாதாரம் போன்ற பல துறைகளில் நம்முடன் இணைந்து செயல்பட வேண்டிய முக்கிய நாடு இந்தியா. அதனால், இந்தியாவுடன் உறவை வலுப்படுத்த அமெரிக்கா எப்போதும் பாடுபட்டது. மேலும், சீனாவின் அச்சுறுத்தல்களை சமாளிக்கவும் இந்தியாவுடனான உறவு அவசியமானது.

ஆனால், டிரம்ப் குடும்பத்துடன் இணைந்து பாகிஸ்தான் வணிகம் செய்ய விரும்புகிறது. இதன் காரணமாகவே இந்தியாவுடனான உறவை புறக்கணிக்க அவர் எடுத்த முடிவுக்கு காரணமாகும். இதனால், ஜப்பான், ஜெர்மனி போன்ற நாடுகளும், ‘இதே நிலை எங்களுக்கும் வருமோ’ என்ற அச்சத்தில் உள்ளன. அமெரிக்காவின் நட்பு நாடுகள் கூட, நம்மை முழுமையாக சார்ந்து இருக்க வேண்டாம் என சிந்திக்கத் தொடங்கியுள்ளன,” என்றார்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.