இஸ்ரேலை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

ஜெருசலேம்,

இஸ்ரேல் , ஹமாஸ் இடையேயான போர் ஓராண்டுக்குமேல் நடைபெற்று வருகிறது. இந்த போரில் 64 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இஸ்ரேல், ஹமாஸ் இடையேயான போரில் ஹமாஸ் ஆயுதக்குழுவினருக்கு ஏமனில் செயல்பட்டு வரும் ஹவுதி கிளர்ச்சியாளர் ஆதரவு அளித்து வருகின்றனர்.

ஹமாசுக்கு ஆதரவு அளிக்கும் வகையிலும், இஸ்ரேலுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் அரபிக்கடல், செங்கடலில் செல்லும் சரக்கு கப்பல்களை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மேலும், இஸ்ரேல் மீதும் அவ்வப்போது ஏவுகணை, டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இந்த தாக்குதலுக்கு இஸ்ரேல் பதிலடி கொடுத்து வருகிறது. சமீபத்தில் ஏமன் மீது இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் ஹவுதி அரசின் பிரதமராக செயல்பட்டு வந்த அகமது அல் ரஹாலி உள்பட பலர் உயிரிழந்தனர்.

இந்நிலையில், இஸ்ரேலின் எலியட் நகரில் உள்ள ரமொன் விமான நிலையத்தை குறிவைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இன்று டிரோன் தாக்குதல் நடத்தினர். இந்த டிரோன்களை இஸ்ரேல் வான் பாதுகாப்பு அமைப்பு நடு வானில் சுட்டு வீழ்த்தின. ஆனாலும், ஒரு டிரோன் விமான நிலையம் மீது மோதி வெடித்தது. இந்த சம்பவத்தில் 63 வயதான நபர் காயமடைந்தார். இதையடுத்து, விமான நிலையம் உடனடியாக மூடப்பட்டது. பின்னர், பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக ஆராயப்பட்டப்பின் விமான நிலையம் மீண்டும் திறக்கப்பட்டது.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.