ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்ற போலி வீடியோ.. பெண்ணிடம் ரூ.3.75 கோடி நூதன மோசடி

பெங்களூரு,

பெங்களூரு சி.வி.ராமன்நகர் பகுதியில் 57 வயது பெண் வசித்து வருகிறார். அவர் தனது செல்போனில் சமூக வலைதளத்தில் வீடியோக்களை பார்த்து கொண்டிருந்தார். அப்போது ஜக்கி வாசுதேவ் பேசும் ஒரு வீடியோ வந்தது. அந்த வீடியோ முழுவதையும் அப்பெண் பார்த்தார். அந்த வீடியோவில் தான் கூறியபடி முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாகவும், இதற்காக வீடியோவில் இருக்கும் லிங்கை கிளிக் செய்து இ-மெயில், செல்போன் எண்ணை பதிவிடும்படியும் பேசி இருந்தார்.

இதனை நம்பிய அவரும், லிங்கை கிளிக் செய்து இ-மெயில், செல்போன் எண்ணை பதிவிட்டார். அதன்பிறகு, 2 மர்மநபர்கள் அந்த பெண்ணை தொடர்பு கொண்டு பேசினார்கள். தாங்கள் கூறும்படி முதலீடு செய்தால், அதிக லாபம் பெற்றுக் கொடுப்பதாக கூறினார்கள். உடனே அவரும் முதலில் குறைவான அளவே பணத்தை முதலீடு செய்திருந்தார்.

மர்மநபர்கள் வற்புறுத்தலின் பேரில் குறிப்பிட்ட இடைவெளியில் ரூ.3.75 கோடியை அந்த பெண் முதலீடு செய்தார். ஆனால் அவர் முதலீடு செய்த பணத்திற்காக அதிக லாபம் எதையும் மர்மநபர்கள் கொடுக்கவில்லை. இதனால் ரூ.3.75 கோடியை திரும்ப எடுக்க அப்பெண் முயன்றார். ஆனால் பணத்தை திரும்ப எடுக்க முடியாமல் போனது. மர்மநபர்களை தொடர்பு கொள்ள முயன்ற போது, 2 பேரின் செல்போன்களும் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.

அப்போது தான் மர்மநபர்கள் தன்னிடம் ரூ.3.75 கோடியை வாங்கி மோசடி செய்தது தெரியவந்தது. மேலும் ஜக்கி வாசுதேவ் பேசுவது போன்று தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு தன்னை மோசடியில் சிக்க வைத்திருப்பதையும் பெண் உணர்ந்தார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

1 More update


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.