பெங்களூரு,
கர்நாடக மாநிலம் ஹூப்பள்ளியில் நடைபெற்ற மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தின் துவக்க விழாவில் அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி சித்தராமையா கலந்து கொண்டார். அந்த சங்கத்தின் சார்பில் சித்தராமையாவிடம் வழங்கப்பட்ட பரிந்துரையில், நெறிமுறையின்றி செயல்படும் யூடியூப் செய்தி சேனல்களால் பத்திரிகை துறையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் யூடியூப் செய்தி சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கட்டாயமாக்க வேண்டும் எனவும் மின்னணு ஊடக பத்திரிகையாளர்கள் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்று, தொலைக்காட்சி சேனல்களைப் போலவே யூடியூப் செய்தி சேனல்களும் அரசிடம் இருந்து லைசென்ஸ் பெற்றே செயல்பட அனுமதிக்கும் முறையை கொண்டுவர கர்நாடக அரசு பரிசீலனை செய்து வருகிறது.
இது குறித்து பேசிய சித்தராமையா, “மிரட்டல் மற்றும் கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடும் யூடியூப் சேனல்கள் சமூகத்திற்கு ஒரு சாபக்கேடு. செய்திகளை ஒளிபரப்பு செய்யும் யூடியூப் சேனல்களுக்கு லைசென்ஸ் நடைமுறையை கொண்டு வர வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இது குறித்து அரசு பரிசீலனை செய்யும்” என்று தெரிவித்தார்.