மும்பை: மகாராஷ்டிர பெண் மருத்துவர் தற்கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான பிரசாந்த் பங்கரை சதாரா போலீஸார் இன்று கைது செய்தனர். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே தலைமறைவாகிவிட்டார், அவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சதாரா எஸ்பி தோஷி, “பால்டன் தாலுகாவில் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு பேரில் ஒருவரான பிரசாந்த் பங்கரை போலீஸார் கைது செய்தனர், அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். மற்றொரு குற்றவாளியான போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபால் பதானே இன்னும் தலைமறைவாக உள்ளார், அவரைப் பிடிக்க தேடுதல் வேட்டை நடந்து வருகிறது.” என்றார்.
மகாராஷ்டிராவின் சதாரா மாவட்டத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும் பெண் மருத்துவர் தற்கொலை செய்து கொண்டார். நேற்று முன் தினம் இரவு பால்டனில் உள்ள ஒரு விடுதி அறையில் இருந்து அவரது உடல்மீட்கப்பட்டது. அப்போது அந்த பெண் மருத்துவரின் உள்ளங்கையில் தற்கொலைக் குறிப்பை போலீஸார் கண்டனர். அதில் அவர் இரண்டு போலீஸ் அதிகாரியான கோபால் பதானே மற்றும் பிரசாந்த் பங்கார் தன்னை துன்புறுத்தியதாக குறிப்பிட்டிருந்தார்.
இதுகுறித்து பேசிய தற்கொலை செய்துகொண்ட பெண் மருத்துவரின் சகோதரர், “என் சகோதரிக்கு நிறைய காவல்துறை மற்றும் அரசியல் அழுத்தம் இருந்தது. குறிப்பாக தவறான பிரேதப் பரிசோதனை அறிக்கைகளை வழங்க அழுத்தம் கொடுக்கப்பட்டது. என் சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும். குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்க வேண்டும்.” என்றும் அவர் கூறினார்.
தற்கொலை செய்து கொண்ட பெண் ஜூன் 19 அன்று பால்டன் துணை காவல் கண்காணிப்பாளரை (டிஎஸ்பி) சந்தித்து, மூன்று போலீஸ் அதிகாரிகள் மீது புகார் அளித்திருந்தார். அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால்தான் பெண் மருத்துவர் தற்கொலை செய்துகொண்டதாக மருத்துவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், இந்த விவகாரத்தில் எம்.பி ஒருவருக்கு தொடர்பு உள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.
இதனை தொடர்ந்து மகாராஷ்டிரா ரெசிடென்ட் டாக்டர்கள் சங்கத்தின் (MARD) மருத்துவர்கள், மும்பையில் உள்ள கே.இ.எம் மருத்துவமனையில் இன்று போராட்டங்களை நடத்தினர். மேலும், மாநிலம் முழுவதும் 8 ஆயிரம் மருத்துவர்கள் இந்தப் போராட்டத்தின் ஒரு பகுதியாக தங்கள் கைகளில் கருப்பு பட்டைகளை அணிந்திருந்தனர்.