பிரயாக்ராஜ்: உ.பி.யின் பிரயாக்ராஜ் மாவட்டம், பாரா அனல் மின் நிலையத்தில் பணியாற்றி வந்தவர் ரோகித் (35). இவர் லாலாப்பூர் என்ற கிராமத்தில் தனது மனைவி சுஷ்மா திவேதி (32) உடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
இந்நிலையில் சுஷ்மா கடந்த வெள்ளிக்கிழமை பிற்பகல் கழுத்தில் காயத்துடன் ரத்த வெள்ளத்தில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவலின் பேரில் விரைந்து சென்ற போலீஸார், வீட்டின் தரையில், ‘‘நான் மனநிலை சரியில்லாதவள், எனது கணவர் அப்பாவி’’ என ரத்தத்தால் எழுதியிருந்ததை பார்த்தனர்.
ஆனால் தற்கொலை குறிப்பை எழுதியதற்கான ரத்தக்கறை சுஷ்மாவின் கையில் இல்லாததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர். இதையடுத்து ரோகித்திடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் சுஷ்மாவை கொலை செய்துவிட்டு தற்கொலை போல் சித்தரிக்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து ரோகித் கைது செய்யப்பட்டார்.