தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார். இவர் தஞ்சாவூரில் பணியாற்றிய போது மாநகராட்சிக்கு சொந்தமான பல கோடி மதிப்புடைய இடத்தை தனி நபர்களிடம் இருந்து மீட்டார். துணிச்சலான இவரது செயல் அப்போது பலராலும் பாராட்டை பெற்றது.
மேலும் அவரது பணி காலத்தில் பல விமர்சனங்களும் எழுந்தன. மாநகராட்சிக்கு சொந்தமான குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரித்தலில் சரவணக்குமார் முறைகேடு செய்ததாகவும் புகார் எழுந்தது.

மாநகராட்சி
மேலும், மாநகராட்சி கடைகள் ஏலம் விட்டதில் விதிகள் மீறப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது. இந்நிலையில் அவர் இடம் மாற்றம் செய்யப்பட்டு மகேஸ்வரி என்பவர் ஆணையராக பொறுப்பேற்றார்.
மாநகராட்சியில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரின் அடிப்படையில் சென்னையில் இருந்து வந்த தணிக்கை குழுவினர் ஆய்வு செய்தனர்.
இந்நிலையில், தஞ்சாவூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் போர்வாள் கோவிந்தராஜ் என்பவர் குப்பை தரம் பிரிப்பதில் முறைகேடு நடந்திருப்பதாகவும், லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் விசாரிக்க வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இது குறித்த வழக்கு நடந்து வந்த நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில், முன்னாள் ஆணையர் சரவணக்குமார் உட்பட நான்கு பேர் மீது லஞ்ச ஒழுப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து சிலரிடம் பேசினோம், தஞ்சாவூர் ஜெபமாலைபுரத்தில் 28 ஏக்கர் பரப்பில் மாநகராட்சிக்கு சொந்தமான குப்பைக் கிடங்கு உள்ளன. இங்கு சேரும் குப்பைகளை தரம் பிரிக்க, கடந்த 2018ம் ஆண்டு பயோமைனிங் முறையில் 2.30 லட்சம் கனமீட்டர் அளவுக்கு குப்பையை தரம் பிரிக்க ஒப்பந்தம் வழங்கபட்டது.

இதற்காக ஒப்பந்தம் எடுத்த தனியார் நிறுவனம் 40,115 யூனிட் மின்சாரத்தை பயன்படுத்தி 73,253 கன மீட்டர் குப்பையை அகற்றி உள்ளது.
அதன் பின், சரவணக்குமார் பொறுப்பேற்ற பிறகு புதிய நிறுவனத்துக்கு 2022 ஆகஸ்டில், 1.56 லட்சம் கன மீட்டர் குப்பையை பிரிக்க ரூ.10.60 கோடி மதிப்பீட்டில் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டது.
ஆனால், புதிதாக ஒப்பந்தம் எடுத்த நபர் வெறும் 5,000 கனமீட்டர் குப்பையை மட்டுமே அகற்றி விட்டு, ரூ.10.60 கோடி பில் தொகை பெற்றுக் கொண்டுள்ளார். அதற்கு, 8,328 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியுள்ளனர்.
இதை வைத்து இதில் முறைகேடு நடந்திருப்பதாக பேசப்பட்டது.
இதனைதொடர்ந்து, இது தொடர்பாக போர்வாள் கோவிந்தராஜ், வழக்கு தொடர்ந்திருந்தார். இதையடுத்து, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் வழக்கு விசாரணை நடைபெற்றது. இந்நிலையில், கடந்த 20ம் தேதி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார், தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலக்தில் குப்பை கிடங்கு மற்றும் ஸ்மார்ட் திட்ட பணிகள் குறித்த ஆவணங்களை ஆய்வு செய்து ஆணவங்களை எடுத்து சென்றனர்.

இதையடுத்து தஞ்சாவூர் மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் சரவணக்குமார், ஓய்வு பெற்ற செயற்பொறியாளர் ஜெகதீசன், பணியிட மாறுதல் செய்யப்பட்டுள்ள உதவி பொறியாளர் கார்த்திகேயன், ஒப்பந்ததாரர் மணிசேகர் ஆகிய நான்கு பேர் மீது தஞ்சாவூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேலும், இது தொடர்பான ஆவணங்களை நீதிமன்றத்தில் சமர்பித்துள்ளனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.