Doctor Vikatan: ஓவர் சந்தோஷம்… இதய ஆரோக்கியத்துக்கு நல்லதில்லை என்பது உண்மையா?

Doctor Vikatan: சந்தோஷமாக இருந்தால் இதயம் ஆரோக்கியமாக இருக்குமா…. ஓவர் சந்தோஷம் இதயத்துக்கு நல்லதில்லை என்றும் சொல்கிறார்களே… இதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த, இதய நோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்.

இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்
இதயநோய் சிகிச்சை மருத்துவர் சு.தில்லைவள்ளல்

பொதுவாகச் சந்தோஷமாக இருப்பது இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது உடலில் சில மாற்றங்கள் நிகழ்கின்றன.

கார்டிசால், அட்ரீனலின், நார்-அட்ரீனலின் போன்ற மன அழுத்த ஹார்மோன்கள் குறைகின்றன. சிம்பதெடிக் சிஸ்டம் (Sympathetic system) அமைதியாகி, பாராசிம்பதெடிக் சிஸ்டம் (Parasympathetic system) வலுவடைகிறது. இதனால் ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கும், இதயத் துடிப்பு சீராகும்.

மகிழ்ச்சியானவர்களுக்கு உணவு முறை, வாழ்க்கை முறை மற்றும் தூக்கம் நல்ல முறையில் அமையும். உடற்பயிற்சி மற்றும் இயற்கையோடு இணைந்த செயல்பாடுகளால் ஏற்படும் மனமகிழ்ச்சி இதய நோய் அபாயத்தைக் குறைக்கிறது.

அதிக சந்தோஷத்தைத் தாங்க முடியாது என்பது சாதாரண மகிழ்ச்சியைக் குறிப்பதல்ல. இது திடீரென ஏற்படும் உணர்ச்சி வெடிப்பு (Emotional Shock) ஆகும்.

உதாரணமாக, திடீர் அதிர்ச்சி (Shock), அதீத உற்சாகம் (Excitement), கடும் பயம் அல்லது கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஏற்படும்போது உடலில் அட்ரீனலின் அளவு பெருமளவு உயர்கிறது. இது சிம்பதெடிக் சிஸ்டத்தைத் தூண்டி, இதயத் துடிப்பைச் சீரற்றதாக (Irregular heartbeat) மாற்றலாம்.

இதனால் ரத்த அழுத்தம் உயரக்கூடும். இது ஏற்கெனவே இதயநோய் உள்ளவர்களுக்கோ அல்லது முதியவர்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

‘புரோக்கன் ஹார்ட் சிண்ட்ரோம்’ (Broken Heart Syndrome) என்றொரு மருத்துவ நிலை இருக்கிறது. ஜப்பானில் கண்டறியப்பட்ட இந்த நிலைக்கு, ‘டகோட்சுபோ கார்டியோமயோபதி’ (Takotsubo Cardiomyopathy) என்று பெயர். நல்ல இதயநலனுடன் இருந்தவர்களுக்குக்கூட திடீரென இதய ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

திடீர் அதிர்ச்சி (Shock), அதீத உற்சாகம் (Excitement), கடும் பயம் அல்லது கட்டுக்கடங்காத மகிழ்ச்சி ஏற்படும்போது உடலில் அட்ரீனலின் அளவு பெருமளவு உயர்கிறது.

அதீத மன அழுத்தத்தாலோ அல்லது உணர்ச்சி வசப்படுவதாலோ இதயத் தசைகள் தற்காலிகமாகப் பாதிக்கப்பட்டு, அதன் ரத்தத்தை பம்ப் செய்யும் திறன் குறைகிறது. இது பெரும்பாலும் பெண்களுக்கு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. இருப்பினும், சரியான சிகிச்சையினால் இதிலிருந்து முழுமையாகக் குணமடைய முடியும்.

சந்தோஷம் என்பது இதயத்திற்கு மருந்து போன்றது. ஆனால், உணர்ச்சிகளை அளவோடு வெளிப்படுத்துவது அவசியம்.  மனநிம்மதி, ஆழ்ந்த தூக்கம், நல்ல உறவுகள், பிரார்த்தனை, தியானம், மன அமைதி, நடைப்பயிற்சி, பிடித்தமான வேலை, இசை மற்றும் இயற்கையோடு இணைந்த பொழுதுபோக்குகளில் கவனம் செலுத்துவதன் மூலம் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ளலாம்.

சுருக்கமாகச் சொல்ல வேண்டும் என்றால், மகிழ்ச்சி நல்லது… அதே சமயம், திடீர் உணர்ச்சிப் பெருக்கைத் தவிர்த்து, மனதை அமைதியாக வைத்திருப்பதே இதய ஆரோக்கியத்தின் அடித்தளம்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.