ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா… தற்போது மலேசியா என அடுத்தடுத்து ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டு வருகிறது இந்தியா.
ஆனால், அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா கையெழுத்திட்டது வர்த்தக ஒப்பந்தம். ஆனால், மலேசியா உடன் கையெழுத்திட்டுள்ளது புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
நேற்று மலேசியா சென்றிருந்தார் இந்திய பிரதமர் மோடி. இந்தப் பயணத்தில் தான் இந்தியா – மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளது.

இந்த ‘IMPACT’ (India-Malaysia Partnership for Advancing Collective Transformation) ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள் இதோ…
> மலேசியாவில் புதிய இந்திய தூதரகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது இரு நாடுகளின் உறவையும் வலுப்படுத்தும்.
> இரு நாடுகளின் பிணைக்கப்பட்ட பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், மலேசியாவில் ‘திருவள்ளுவர் மையம்’ அமைக்கப்படும்.
> இந்தியாவின் UPI-யும், மலேசியாவின் PayNet-உம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
இதன் மூலம் இரு நாடுகளுக்கு இடையே எளிதான பணி பரிவர்த்தனை நடக்கும். மேலும், அதற்கு ஆகும் செலவுகளும் குறையும்.
இது இந்தியாவில் பணிபுரியும் மலேசியர்களுக்கும், மலேசியாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
> விநியோகச் சங்கிலி மற்றும் பணியாளர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, செமி கண்டக்டர் துறையில் இரு நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
> கடல் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உளவுத்துறைப் பகிர்வு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
> மலேசியாவில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த சமூக பாதுகாப்பு ஒப்பந்தம்.

> இந்தியாவில் படிக்க மலேசியா மாணவர்களுக்கு ஊக்கமளிக்க ‘திருவள்ளுவர் ஊக்கத்தொகை’ வழங்கப்படும்.
> இந்த ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி வரை, இந்தியர்கள் மலேசியாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
> வனவிலங்கு பாதுகாப்பிற்காக இந்தியா முன்னெடுத்துள்ள International Big Cat Alliance (IBCA)-ல் மலேசியா சேரும்.
> சுகாதாரம், மருத்துவம், பேரிடர், ஊழலுக்கு எதிராக போராடுவதில் போன்றவற்றிலும் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.